ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

வேரெழுத் தாய்விண்ணாய் அப்புற மாய்நிற்கும்
நீரெழுத் தாய்நிலம் தாங்கியும் அங்குளன்
சீரெழுத் தாய்அங்கி யாய்உயி ராம்எழுத்
தோரெழுத் தீசனும் ஒண்சுட ராமே.

English Meaning:
As One-Letter Lord Pervades All

As Seed-Letter, He pervades Spaces and Beyond,
As Supreme-Letter, He fills world and sustains it,
As Renowned-Letter, He stands as fire, and life,
As one Letter, He stands Resplendent Rare.
Tamil Meaning:
சிவபெருமான் நாத எழுத்தாகிய பிரணவமாய் அதன் வழியே வானத்தில் பொருந்தி எல்லாப் பொருட்கும் வியாபக மாய் நிற்பான். நீரெழுத்தாகிய நகாரமாய் அதன்வழியே நீரில் பொருந்தி அதன்வழியே பொருள்களைப் பதம் செய்வான். நில வெழுத்தாகிய மகாரமாய் அதன்வழியே நிலத்திற் பொருந்தி எல்லா வற்றையும் தாங்குவான். நெருப்பெழுத்தாகிய சிகாரமாய் அதன் வழியே நெருப்பில் பொருந்திப் பொருள்களைச் சுட்டுப் பக்குவப் படுத்துவான். காற்றெழுத்தாகிய வகாரமாய் அதன்வழியே காற்றிற் பொருந்திப் பரந்து சலித்துப் பொருள்களைத் திரட்டுவான். எஞ்சிய ஓரெழுத்தாய யகாரமாய் அதன்வழியே ஆன்மாவிலும், இருசுடரிலும் பொருந்தி அறிதலும், ஒளிவீசலும் செய்வான்.
Special Remark:
செய்யுள் நோக்கி, வேண்டும் சொற்கள் பலவற்றைத் தொகுத்து அவை குறிப்பால் தோன்றக் கூறினாராகலின், அவற்றை இவ்வாறு விரித்துரைத்துக்கொள்க. பூதம் முதலியவற்றைத் திருவைந் தெழுத்தில் எழுத்துக்கள் நிற்கும் முறைபற்றிக் கூறினமை அறிக. இங்குக் கூறிய ஐந்தெழுத்துப் பிரணவத்தோடுகூடிய தூல ஐந்தெழுத் தாதல் வெளிப்படை. ``ஒண் சுடர்`` என்பது அகத்தொளியாகிய அறி வையும், புறத்தொளியாகிய சூரிய சந்திரர்களையும் குறித்தது. அப்புற மாதல், வியாபகமாய் நிற்றல். ``ஓரெழுத்து`` என்பதன் பின்னும் ஆக்கம் வருவிக்க. ``ஈசனும்`` என்ற உம்மை சிறப்பு. இவ்வெழு வாயை முதலிற்கொண்டு உரைக்க. மேலை மந்திரத்தில், ``ஐந்தின் பெருமையே அகலிட மாவது`` என்றது இனிது விளங்குதற்பொருட்டு, அஃது ஆமாற்றை இதனுள் வகுத்துக் கூறினார். ஆகவே, நீரெழுத்து முதலியவற்றைப் பூதங்கட்குரிய பீசாக்கரங்களாகக் கொள்ளல் வேண்டாமை அறிக. இங்குக் கூறிய எழுத்துக்கள், அவ்வப்பொருட்கு உரியனவாதலை ஆணையாற்கொள்க.