ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

அற்ற இடத்தே அகாரம தாவது
உற்ற இடத்தே உறுபொருள் கண்டிடச்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்
குற்றம் அறுத்தபொன் போலும் குளிகையே.

English Meaning:
Lord is in ``Aum`` Beyond Adharas

Where Adharas end,
``Aum`` is;
There shall you see Lord
Who of Himself reveals;
He is Blemishless,
He is Light Divine,
He is Whole Truth,
He is the Alchemic pill,
Of flawless gold.
Tamil Meaning:
மேற்கூறியவாறு அகாரம் முதலியவற்றால் ஆயாமம் (தடுத்தல்) செய்யப்பட்ட பிராண வாயு நிராதாரமாகிய உச்சியை அடைந்தபொழுது, அடைதற்குரிய பொருளாகிய சிவனைக் காணலாம். அப்பொழுது முன்பெல்லாம் மறக்கருணை உடையனாய் இருந்த சிவன் அந்நிலை நீங்கி அறக்கருணை உடையனாய், வளவிய ஒளியாயும், உண்மையாயும் நின்று, செம்பைக் களிம்பு நீக்கிப் பொன்னாகச் செய்யும் குளிகைத் தன்மையைப் பொருந்தி நிற்பன்.
Special Remark:
அற்ற இடம் - `ஆதாரம்` எனப்பட்டவைகளைக் கடந்த இடம். ``அகாரம்`` என்றது உபலக்கணம். `அகாரமதனால்` என உருபு விரித்துக் கொள்க. ஆவது - உண்டாவது. `அகாரமதனால் ஆவது அற்ற இடத்தே உற்றவிடத்து` என்க. ``செற்றம் அறுத்த செழுஞ்சுடர்`` என்றது அனுவாதமாய் நின்று பொருள் பயந்தது. `செழுஞ்சுடர் குளிகை போலும்` என இயையும். ஈற்றடி, `பொன்னினது குற்றத்தை அறுத்த குளிகைபோலும்` என்னும் பொருளது.
இதனால், `மேற்கூறிய ஆதார யோக செபங்களிலும் நிராதாரயோக செபம் சிறந்தது` என்பது கூறப்பட்டது.