ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

பரத்திலே ஒன்றாய்உள் ளாய்ப்புற மாக
வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்
தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.

English Meaning:
One And Many
The Supreme is One, Absolute without lapse,
In descent thereof, Mal and Aya becoming;
Thus He, the One into many ranked;
By conscious choice a Self-deduction made.
Tamil Meaning:
சிவபெருமான் ஒன்றோடும் ஒட்டாது தனித்து நிற்கும் மேல் நிலையில் ஒருவனேயாய், அந்நிலையினின்று வரு தலாகிய பொதுநிலையில் எல்லாப் பொருட்கும் உள்ளும், புறம்பும் நிறைந்து நிற்பவனாய் மால், அயன் முதலிய ஒன்பது நிலைகளை உடையவனாகியும், உயிர்களின் தகுதி வேறுபாட்டிற்கேற் மற்றும் பல் வேறு நிலைகளையுடையனாகியும் இவ்வாறெல்லாம் தனது திருவருள் ஒன்றிலே நின்று உயிர்கட்குப் பாசத்தைப் போக்கி யருளுகின்றான்.
Special Remark:
எனவே, `இவற்றிற்கெல்லாம் காரணம் பல்வேறு நிலைப்பட்ட உயிர்கள் மாட்டுக் கொண்ட அருளேயன்றிப் பிறி தில்லை` என, `ஒருவன் ஒருநிலையில் நில்லாது பல நிலையை மேற் கொள்ள வேண்டுவது என்னை` என்னும் ஐயத்தை நீக்கியவாறு ``மாயவன், அயன்``, ``தரம்`` என்பன உபலக்கணம். வரத்து, `வரவு` என்னும் தொழிற் பெயர். சொரூபம் நிலையும், தடத்தம் வரவும் ஆதல் உணர்ந்து கொள்க. கரம் போல்வதனை, ``கரம்`` என்றார். இறைவனது சத்தியை அவனுக்குக் கை போல்வதாதலை.
``நங்கையினால் நாம் அனைத்தும் செய்தாற்போல் நாடனைத்தும்
நங்கையினால் செய்தளிக்கும் நாயகனாம்``
என்னும் திருக்களிற்றுப்படியார். 78 இதனாலறிக. இதனானே, ``என்னை இப்பவத்திற் சேராவகை எடுத்து`` (சிவஞானசித்தி. பாயிரம். 2) என்பதில் எடுத்து என்றது, `அருளாகிய கையால் எடுத்து` எனப் பொருள் தந்தது.