ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

ஈசன் இருக்கும் இருவினைக் கப்புறம்
பீசம் உலகிற் பெருந்தெய்வ மானது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.

English Meaning:
God Is One
Beyond the Two Karmas is Isa seated,
The seed of this world, the mighty God become;
``This`` and ``That`` is Isa—so the thoughtless contend,
The dross but know the basest sediment low.
Tamil Meaning:
வினையின் நீங்கி நிற்பவன் சிவபெருமான் ஒருவனே. அதற்கு உலகில் திருக்கோயில்களில், காணாத அரு வினுக்கும் காண்கின்ற உருவினுக்கும் (தி.8 பெரியபுராணம். சாக்கிய.8) முதலாயுள்ள அவனது இலிங்கத் திருமேனி நடுவிடத்தில் விளங்க, ஏனைத் தேவர் பலரும் அதனைச் சூழ்ந்து போற்றி நிற்றலும், அத்தேவர் நடுவிடத்தில் விளங்கும் கோட்டங்களில் அஃது அவ்வாறு நில்லாமையுமே சான்றாகும். காட்சியானே உணரப்படுகின்ற இதனையும் நோக்காது, முதற்கடவுள் `அது` என்றும் `இது` என்றும் பிற தெய்வங்களைச் சுட்டிச் சொல்லித் தம்முட் சிலர் கலாய்ப்பாராயின், அவர் பகுத்துணர்வில்லாதவரே யாவர். தூர்ப்புக்களையே பொருளென்று கண்டவர்கள் அத்தூர்ப்பைத் தான் அறிவார்கள்; அவற்றை அகற்றி உள்ளே உள்ள பொருளை அவர்கள் எவ்வாறு கண்டறிவார்கள்!
Special Remark:
``ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம் என்றதற்குக் கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ``ஈசனே, தூரே`` என்னும் பிரிநிலை ஏகாரங்கள் தொகுத்தலாயின. முதலதனால், `ஏனைத் தேவர் பலரும் வினையாற் கட்டுண்டு நிற்பவரே` என்பது பெறப்பட்டது. `இருக்கும்` என்பது முற்று. ``உலகில்`` என்றதனால், காட்சிப் பொருளாய `கோயில்` என்பது விளங்கிற்று. பெருமை, இங்கு முதன்மையைக் குறித்தது. ``ஆனது`` என்றது, `ஆகிநின்றது` என்றவாறு. இதன் முதல் அடி மேற்கோளாயும், இரண்டாம் அடி ஏதுவாயும் நின்றன. நினைப்பு - ஆய்வு. ``தூசு`` என்றது பின்வரும் தூரினை. தூர் - பள்ளங்களைத் தூர்த்து நிற்கும் பொருள்கள். கூரிய நோக்குடையவரே, தூரினை அறிந்து அகற்றி உள்ளே கிடக்கும் பொருளைக் காண்பர். அதுபோல அறிவுடையவரே கலாய்ப்புக்களை அகற்றி உண்மையை உணர்வர் என்றவாறு.