ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

வல்லவன் வன்னிக் கிறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே. 

English Meaning:
Infinite Grace
The God of Fire, was set amidst the seas by The Mighty Lord
Do not say He is not
He, the Lord of the Heavenly Beings all,
Who, day and night, pours forth His Divine Grace.
Tamil Meaning:
உலகீர், எல்லாம் வல்லவனாய், கடல் நீரை, `தீக்கடவுளாகிய வடவையிடத்து அடங்கிநிற்க` என மிகுந்து வாராமல் நிற்கச்செய்த அருளாணை உடையவனாகிய சிவபெருமானை, நுண்ணுணர்வின்றி, `இல்லை` எனக் கூறிப்பிணங்குதல் வேண்டா; அவன் அயன், மால் முதலிய கடவுளர்க்கு முதல்வனாய் நின்று, எப்பொழுதும் உயிர்கட்கு நலம் புரிந்துவருகின்றான்.
Special Remark:
`உலகம் ஒருவனது ஆணை வழிநடப்பதும், அவ் வொருவன் எல்லாம் வல்லவன் என்பதும் கடல் கரையின்றியே அடங்கி நிற்கும் இவ்வொன்றானே அறியப்படும்` என்பது முன்னிரண்டு அடிகளின் கருத்து. ``வல்லவன், முதல்`` என்பவற்றில் ஆக்கச்சொல் விரிக்க.