ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன்
நினைத்த தறிவ னெனில்தாம் நினைக்கிலர்
எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே. 

English Meaning:
Seek Him, He Seeks You

He who raises from the thought of the mind
He knows what ever we think but he doesn't think
I do not have the love of god. The lord
Dwell with those who want to get rid of the world.
Tamil Meaning:
கண்ணிற்குப் புலப்படாது கருத்தினுள்ளே நிற்கின்ற கள்வனாகிய சிவன், யாவர் எதனை எண்ணினும் அதனை அறிவான் என்று உண்மை நூல்கள் கூறவும், உலகர் அவனை நினைத்து அவன் அருளைப் பெறுகின்றார்களில்லை. நினையாமலே ஒவ்வொருவரும் `சிவன் எங்களுக்கு அருள் பண்ணவில்லை` என்று நொந்து கொள்கின்றார்கள். உண்மையில் சிவன், பிறவற்றை நினையாது தன்னை நினைப்பவர் பக்கமே விரும்பி நிற்கின்றான்.
Special Remark:
`ஆதலின் அவன் அருளைப் பெறுதற்கு அவனை நினைத்து நிற்றலே செய்யத்தக்கது` என்றவாறு. மாய நாடன் - வஞ் சனையை இடமாகக் கொண்டு நிற்பவர். `வஞ்சம்` என்றது புலனாகாமையை. `பிறர்க்குத் தீங்கு சூழும் வஞ்சனை அன்று` என்பது தோன்ற, `நல்` என்னும் அடை கொடுத்தார். ``எனக்கு`` என்றது பன்மை் ஒருமை மயக்கம். `எனக்கு அன்பிலன்` என இயையும். பிழைத்தல், பிறவற்றினின்று நீங்குதல். ஈற்றடி மூன்றாம் எழுத்தெதுகை.