ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரருந் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே

English Meaning:
Confers Everything On Gods
Him of the matted locks fragrant with Konrai flowers,
Him who is with the Divine Mother,
Him the Devas and the celestials,
Adore for anything they require.
Tamil Meaning:
திருத்தி விளங்கிய, கொன்றை மாலையணிந்த குழல்போலும் சடையை உடைய, அழகு விளங்கும் மங்கையைப் பாதியில் உடைய சிவபெருமானை மும்மூர்த்திகளும், தேவர்களும் எதனை விரும்பிக் குற்றத்தையே குணமாகக் கொண்டாடி வணங்கு கின்றார்கள்?
Special Remark:
``தாம்தாம் வேண்டுவன யாவற்றையும் விரும்பியே அவ்வாறு வணங்குகின்றார்கள்`` என்பது குறிப்பெச்சம். `கோது` இரண்டனுள் முன்னது, `கொழுது` என்பதன் மரூஉ. கொழுதுதல் - திருத்துதல். பின்னது - குற்றம். மகளிர் கூந்தலும் சிலபொழுது குழல் போலத் திருத்திவிடப்படுதல் பற்றியே, `குழல்` எனப்படுகின்றது. அமரர் என்றது ஏனையோரை நோக்க நெடுநாள் வாழ்வுடையராதல் பற்றி மும்மூர்த்திகளைக் குறித்தது. `கோது குணமாகக் குலாவிப் பயில்வார்` என மாற்றிக் கொள்க. குற்றமாவன, எலும்பும் சாம்பலும் அணிதல், சுடுகாட்டில் ஆடுதல், இரந்துண்டல் முதலியன.
கானார் புலித்தோல் உடை, தலைஊண், காடுபதி
ஆனால் அவனுக்கிங் காட்படுவார் ஆரேடி?
ஆனாலுங் கேளாய் அயனும் திருமாலும்
வானாடர் கோவும் வழியடியார் சாழலோ.
-தி.8 திருவாசகம். திருச்சாழல். 12
என்றமை காண்க. ஒன்றும் இல்லாதவன்போலவும், பித்தன் போலவும் காணப்படினும் வேண்டுவார் வேண்டுவன பலவற்றையும் அருளுதல் இதனால் தொகுத்துக் கூறப்பட்டது. ``மாது குலாவிய வாள்நுதல் பாகன்`` என்றதும் அதனைத் தெளிவிக்கும் குறிப்பு.