ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.

English Meaning:
All Worship Him
Gold- bewrought, His matted locks fall back and gleam
Nandi, His name,
My Lord is He, ever by me worshipt;
But none there be whom He worships.
Tamil Meaning:
என்னால் வணங்கப்படுகின்ற எங்கள் சிவபெரு மான், தனது பொற்சடை பொன்னால் செய்யப்பட்டனவே என்னும்படி பின்னலோடு விளங்குமாறு இருப்பவன். ``நந்தி`` என்னும் பெயர் உடையான். அவனால் வணங்கப்படுபவர் ஒருவரும் இல்லை.
Special Remark:
`தானே எல்லாராலும் வணங்கப்படுபவன்` என்பதாம். ``பொற்சடை`` என்பதில், ``பொன்`` என்றது, வாளா பெயராய் நின்றது. பின் - பின்னுதல்; முதனிலைத் தொழிற்பெயர். ஆல், ஒடுவின் பொருளில் வந்தது. ``பின்னால்`` என்பதனை இடப்பொருட் டாக்கி, அது பிறரைத் தலைதாழ்த்து வணங்காமையைக் குறிக்கும் குறிப்புமொழியாக உரைப்பாரும் உளர். `பின்தாழ் சடையானை`(தி.1 ப.74 பா.4) என்றாற்போல வரும் எவ்விடத்தும் அங்ஙனமே உரைத்தல் அவர் கருத்து. சடை தவக்கோலத்தை உணர்த்துதலால், பற்றின்மையைக் குறிக்கும் குறிப்பாகும். பொன்மை கவர்ச்சியையும், பின்னல் பழமையையும் குறிக்கும். நந்தி - இன்பம் உடையவன். ``அதனைத் தனக்கே உரிய பெயராக உடையவன்`` என்றவாறு. ``சிவன்`` என்பது இப்பொருளும் தரும். இன்பம், இயல்பாய் இருத்தற்குக் காரணம் மெய்ம்மையும், அறிவும் இயல்பாக இருத்தலே என்பது தோன்ற, முதற்கடவுளை, ``சச்சிதானந்தன்`` என உபநிடதங்கள் கூறுதல் அறிக. எனவே, அவையும் இதனாற் குறிக்கப்பட்டனவாம். இதனால், பற்றின்மையும், கவர்ச்சியும், காலத்திற்கு உட்படாமையும், மெய்யறிவின்பங்களை இயல்பாக உடைமையும், தனக்கு மேலாவார் இன்றித் தானே எல்லார்க்கும் மேலானவனாதலும் ஆகிய கடவுட்டன்மைகள் கூறப்பட்டன.