
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
பதிகங்கள்

பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.
English Meaning:
All Worship HimGold- bewrought, His matted locks fall back and gleam
Nandi, His name,
My Lord is He, ever by me worshipt;
But none there be whom He worships.
Tamil Meaning:
என்னால் வணங்கப்படுகின்ற எங்கள் சிவபெரு மான், தனது பொற்சடை பொன்னால் செய்யப்பட்டனவே என்னும்படி பின்னலோடு விளங்குமாறு இருப்பவன். ``நந்தி`` என்னும் பெயர் உடையான். அவனால் வணங்கப்படுபவர் ஒருவரும் இல்லை.Special Remark:
`தானே எல்லாராலும் வணங்கப்படுபவன்` என்பதாம். ``பொற்சடை`` என்பதில், ``பொன்`` என்றது, வாளா பெயராய் நின்றது. பின் - பின்னுதல்; முதனிலைத் தொழிற்பெயர். ஆல், ஒடுவின் பொருளில் வந்தது. ``பின்னால்`` என்பதனை இடப்பொருட் டாக்கி, அது பிறரைத் தலைதாழ்த்து வணங்காமையைக் குறிக்கும் குறிப்புமொழியாக உரைப்பாரும் உளர். `பின்தாழ் சடையானை`(தி.1 ப.74 பா.4) என்றாற்போல வரும் எவ்விடத்தும் அங்ஙனமே உரைத்தல் அவர் கருத்து. சடை தவக்கோலத்தை உணர்த்துதலால், பற்றின்மையைக் குறிக்கும் குறிப்பாகும். பொன்மை கவர்ச்சியையும், பின்னல் பழமையையும் குறிக்கும். நந்தி - இன்பம் உடையவன். ``அதனைத் தனக்கே உரிய பெயராக உடையவன்`` என்றவாறு. ``சிவன்`` என்பது இப்பொருளும் தரும். இன்பம், இயல்பாய் இருத்தற்குக் காரணம் மெய்ம்மையும், அறிவும் இயல்பாக இருத்தலே என்பது தோன்ற, முதற்கடவுளை, ``சச்சிதானந்தன்`` என உபநிடதங்கள் கூறுதல் அறிக. எனவே, அவையும் இதனாற் குறிக்கப்பட்டனவாம். இதனால், பற்றின்மையும், கவர்ச்சியும், காலத்திற்கு உட்படாமையும், மெய்யறிவின்பங்களை இயல்பாக உடைமையும், தனக்கு மேலாவார் இன்றித் தானே எல்லார்க்கும் மேலானவனாதலும் ஆகிய கடவுட்டன்மைகள் கூறப்பட்டன.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage