ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் குங்கிழக் குத்திசை எட்டொடும்
ஆற்றுவன் அப்படி ஆட்டலும் ஆமே.

English Meaning:
Path Crossed
If we tread the path of goodness shown by Him,
And sing His praise and adore Him,
He, the Lord of all ten directions,
Will protect and impel us in the right direction.
Tamil Meaning:
பிறிதொரு நெறியும் ஒப்பாக மாட்டாதபடி உயர்ந்து நிற்பதாய சிவநெறியாற் பெறப்படுபவனாகிய சிவபெருமானுக்கு வணக்கம் கூறுங்கள்; கூறிப் பலவாற்றால் புகழுங்கள்; புகழ்ந்தால், மேலுலகத்தையும் கீழுலகமாகிய நிலவுலகம் முழுதையும் உமக்கு அவன் வழங்குவான்; அவ்வுலகங்களை நீங்கள் உங்கள் விருப்பப்படி ஆளலாம்.
Special Remark:
``ஆற்றுகிலா`` என்றதில் ஆற்றுதல், ``வையகமும் - வானகமும் ஆற்றல் அரிது`` (குறள். 101) என்பதிற் போல `ஒத்தல்` என்றும், ``ஆற்றுவன்`` என்றதில், ஆற்றுதல் ``அற்றார்க் கொன்றாற் றாதான் செல்வம்`` (குறள். 1007) என்பதிற்போல, `கொடுத்தல்` என்றும் பொருள் தந்து நின்றன. `வழக்கும், எதிர்வழக்கும் கூறு வோரது கூற்றினுள் மெய்ம்மை இது என்பது நடுவுநிற்பார்க்கு இனிது விளங்கி நிற்றல்போலப் பல நெறிகளும் பிறர்கோள் மறுத்துத் தம் கோள் நிறுவுமாயினும், உண்மை காண் பார்க்குச் சிவநெறியது உயர்வு `சாந்து கமழும் கவரியின் கந்தம் போல்` (தி.10 பா.69) இனிது விளங்கியே நிற்கும் என்பார், சிவநெறியை `ஆற்று கிலா வழி` என்று அருளினார்.
ஆதல், உளவாதல். அஃது இங்குப் பெறப் படுதலைக் குறித்தது. ``மேற்கு, கிழக்கு`` என்பவை, `மேல், கீழ்` என்னும் பொருளவாய் நின்றன. திசைக்கண் உள்ளவற்றை, `திை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?` என்றார். மூவுலகமும் இங்கு, `மேல், கீழ்` என இரண்டாக அடக்கப் பட்டன. அப் படி - அவ்வுலகம். `தம் விருப்பப்படி நடத்தலாம்` என்பது தோன்ற, `ஆளலுமாம்` என்னாது, ``ஆட்டலுமாம்`` என்றார்.
இனி, `ஆளலுமாம்` என்பதே பாடம் என்றலும் ஆம். `சிவபிரானைப் போற்றுவோர் எவ்வுலகத்தை ஆளநினைப்பினும் ஆள்பவராவர்` என்பது திருமுறைகளுள் பலவிடத்தும் இனிது எடுத்துச் சொல்லப்படுவது. `ஏனைக் கடவுளர்பால் அடையும் பயனையும் சிவபிரான்பால் அடையலாம்` என்பது கூறி, அவனை வாழ்த்துதலை வலியுறுத்தியவாறு.