ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

இணங்கிநின் றான்எங்கு மாகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே. 

English Meaning:
Your Guide
Beckoning He stood, He, the All-pervading;
Invisible to most but
To those who freely give themselves to the Lord on High,
To them is He the certain, immutable Guide.
Tamil Meaning:
மாயோனும் சிவபெருமானை வழிபட உடன்பட்டு நின்றதல்லது வழிபட்டுக் காணவில்லை. படைப்புக் கடவுளாகிய பிரமன் வழிபடுதற்கு உடன்படவேயில்லை. அவர்கட்குப் பின் இந்திரன் காண இயலாதவனாய் வாட்டமுற்று நின்றான். ஆகவே, சிவபெருமான் தன்னை வணங்கி நிற்பவர்க்கே செல்கதித் துணையாய் நிற்கின்றான்.
Special Remark:
இங்கு வழிபடுதல், பயன் கருதாத மெய்யன்பினால் வழிபடுதலாதலின், `திருமாலும் அது செய்யவில்லை` என்றும், பயன் கருதி வழிபட்டுச் சக்கரம் பெற்றமையால் ``இணங்கி நின்றான்`` என்றும் கூறினார். பிரமனும், இந்திரனும் அவ்வாறு வழிபட்டுப் பேறு பெற்ற வரலாறு ஒன்றும் சிறப்பாகச் சொல்லப்படாமையால், அவர் களை, பிணங்கியும், வணங்கியும் நிற்பவராகக் கூறினார். ``எங்குமாகி நின்றான்`` என்றது, `விட்டுணு` என்னும் சொற்பொருளை எடுத்தோதியவாறு. ``பின்`` என்பதை இரண்டாம் அடியின் இறுதியிற் கூட்டி உரைக்க. மேல் பொது வணக்கம் கூறி, இதனால், உண்மை வணக்கம் கூறியவாறு. இதுகாறும் வணங்குதல் கூறப்பட்டது. இனி, வாழ்த்துதல் கூறப்படும்.