ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத் தலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றுந் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித் துலகம் பிணங்குகின் றார்களே. 

English Meaning:
Trinity—One Continuity
He, the Being First, and He, the Emerald-hued,
And he of the glowing, original Lotus-seat—
Though the three form an integral whole
The world considers them separate and quarrel.
Tamil Meaning:
யாவர்க்கும் முதல்வனாகிய சிவனும், அழகிய மணிவண்ணனாகிய மாயோனும், முதற்றொழிலாகிய படைப்பினைச் செய்யும் பிரமனும் என்கின்ற வடிவங்களை ஆராயின், அம்மூன்று வடிவங்களும் தொழில் இயைபில் ஒன்றே என்று அறியாமல்,`வேறு வேறு` என்று சொல்லி உலகத்தார் இகலி நிற்கின்றார்கள்; இஃதோர் அறியாமை இருந்தவாறு!
Special Remark:
தொழில் இயைபு பின்னர் விளக்கப்படும். இயைபு பட்ட தொழில்கள் பலவற்றைப் பலர் இயற்றுங்கால் தம்முள் இணங்கி இயற்றுதலன்றிப் பிணங்கி இயற்றாமையும், ஒரோவழிப் பிணங்கி இயற்றியவழி ஒன்றும் நடவாதொழிதலும் காட்சியால் அறியப் படுவனவாகலின், அவைபற்றி இடையறாது நிகழும் படைப்பு முதலியவற்றை இயற்றுவோர் அவற்றைத் தம்முள் இணங்கியே இயற்றுகின்றமை துணியப்படும் என்பார், ``மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார் பேதித்துப் பிணங்குகின்றார்களே`` என்றார். எனவே, `மால், அயன் இருவரும் பொருளால் சிவபெருமானின் வேறாயினும், தொழிலால் அவனோடு ஒருவரே என்றதாயிற்று.