ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே. 

English Meaning:
Omni-Competent
Without Him, there be Celestials none,
Without Him, penance is not,
Without Him, naught the Three accomplish,
Without Him, I know not how to enter the City`s Gate.
Tamil Meaning:
சிவபெருமானைத் தவிர இறவாதவர் பிறர் இல்லை; அவனை உணராது செய்யும் செயல் சிறந்த தவமாதல் இல்லை; அவனது அருளின்றி மும்மூர்த்திகளால் யாதொரு செயலும் நடவாது. அவனது அருளின்றி முத்திக்கு வழி இல்லை.
Special Remark:
``சிவனொடொக்குந் தெய்வம் தேடினும் இல்லை`` என மேற்கூறியதனையே அநுவதித்தார்; அதனால், பின்வருவன வற்றை வலியுறுத்தற்பொருட்டு. அருந்தவம், வீடடைவிக்கும் தவம். ``ஊர் புகுதல்`` என்றது ஒட்டணியாய் நின்று, முத்திபெறுதலைக் குறித்தது. இறவாமை முதலிய நான்கும் முதற்கடவுளது இயல்புகள் என்பதைப் பெயர்த்துரை (அநுவாத) வாய்பாட்டாற் கூறி, `அவ்வியல் புகளை உடையவன் சிவபெருமான் ஒருவனே` என்பது உணர்த்திய வாறு. நஞ்சுண்ட வரலாறு கூறும் புராணத்தால் சிவபெருமான் இறவாதவன் என்பது தெளிவாதலாலும், `சிவன் முத்திக் கடவுள்` என்பதே வழக்காதலாலும் ``அவனை ஒழிய அமரரும் இல்லை; அருந்தவம் இல்லை`` என்றார். அவை அங்ஙனமாகவே, ஏனைய இரண்டும் இனிது பெறப்பட்டன. ``நீல மணிமிடற் றொருவன்போல மன்னுக``, (புறம் - 91) ``சாவா மூவாச் சிங்கமே`` (தி. 6. ப.99 பா.2) என்றாற் போலும் மெய்ம்மொழிகளைக் காண்க.