ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
வந்திவ்வண் ணம்எம் மனம்புகுந் தானே. 

English Meaning:
In Heart`s Centre
``You of the Twilight Hue! O! Hara! O! Siva!``
Thus, His Holy Feet devotees praise and sing;
He of the primary Hue, the First, the Infinite
Entered my being, my heart`s centre held.
Tamil Meaning:
`அந்தி வானம்போலும் நிறம் உடையவனே, அரனே, சிவனே` என்று சிவபெருமானது திருப்பெயர்கள் பலவற்றைச் சொல்லி, தியானத்திற்கு உரிய அவனது வடிவத்தைச் செம்மை பெற்ற அடியார்கள் வணங்கும்பொழுது நானும், `எவ்வுருவிற்கும் முதலாய திருவுருவத்தை உடையவனே, தலைவனே, மேலானவனே` என்று துதித்து வணங்கினேன்; அப்பொழுதே ஞானமயனாகிய அவன் இவ்வாறு என் உள்ளத்திற் புகுந்துவிட்டான்.
Special Remark:
அரன் - பாசத்தை அரிப்பவன். சிவன் - மங்கலமான வன். வடிவத்தை ``வண்ணம்`` என்றார். ``தொழ`` என்றது, ``ஞாயிறு பட வந்தான்`` என்பதிற்போல நிகழ்கால வினை. `அடியார் தொழ நானும் தொழுதேன்` என்றது, `அவர் செய்ததை நானும் செய்தேன்; அச் செயலின் திறம் முற்றும் அறிந்து செய்தேனில்லை` என்றபடி.
``ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு
ஞானத் தாய்உனை நானுந் தொழுவனே`` -தி.5 ப.91 பா.3
என்ற அப்பர் திருமொழியும் காண்க. ``என்று`` என்றது, தன்மை ஒருமை இறந்த காலமுற்று. இங்கு ``என்றேன்`` என வருதல் யாப்பிற்கு ஒவ்வாமை அறிக. ``இவ்வண்ணம்`` எனச் சுட்டியது தம் அநுபவங்களை. இத்துணையும் வாழ்த்துதலே கூறினார். வணங்குதல், திருவடிவின் முன்னன்றிச் சிறவாது. நினைதற்கு நெஞ்சு ஒடுங்குதல் அரிது. அதனால் எப்பொழுதும் யாவர்க்கும் எளிதிற் கூடுதல் பற்றி வாழ்த்துதலையே பெரிதும் வலியுறுத்தினார். தேவாரம், திருவாசகம் முதலிய திருமுறைகள் பரக்க எழுந்தமைக்கும் இதுவே காரணம் என்க. திருவள்ளுவரும் மேற்குறித்த குறளில் இறைவனது பொருள்சேர் புகழையே எப்பொழுதும் இடைவிடாது சொல்லுதல் வேண்டுமென விதித்தல் நினைக்க. இனி மூவகை வழிபாட்டினையும் இறுதிக்கண் தொகுத்துணர்த்துவார்.