ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்
பொன்னையொப் பாகின்ற போதகத் தானே. 

English Meaning:
Divine Father
Primal First is He, older than the Co-eval Three
But the Lord is He peerless, unequalled;
Call Him ``Father, `` and Father He to thee
Inside you He flames in the Lotus of Golden Hue.
Tamil Meaning:
பொன்போலும் மேனியையுடைய, யானைத் தோற் போர்வையாளனாகிய சிவபெருமானே! ஊழிகளுள் ஒன்றில் ஒருவர் மற்றிருவரையும், பிறிதொன்றில் மற்றொருவர் ஏனை இருவரையும் படைக்குமாற்றால் தம்முள், `முன்னோர், பின்னோர்` என்னும் வேறுபாடில்லாத மும்மூர்த்திகளுக்கும் என்றும் முன்னோன்; அத்தன்மை பிறருக்கு இன்மையால், தன்னை ஒப்பாகின்ற பொருள் பிறிதொன்றும் இல்லாத பெருந்தலைவன்; தன்னை, ``அப்பா`` என்று அழைப்பவர்க்கு அப்பனுமாய் இருக்கின்றான்; (உம்மையால்) ``அம்மே`` என்று அழைப்பவர்க்கு அம்மையாயும் இருக்கின்றான்.
Special Remark:
``முன்`` என்றது பல ஊழிக்காலங்களை. ``முன்னோன்`` என்றது, அவர்களை என்றும் தானே படைத்தல் பற்றி. ``படைப்போற் படைக்கும் பழையோன்``, ``முன்னோன் காண்க`` (தி.8 திருவாசகம் - திருவண்டப்பகுதி 13,29) என்றமை காண்க. ``அயனைமுன் படைத்திடும் ஒரு கற்பத்து; அரியை முன் படைத்திடும் ஒரு கற்பத்து`` (சிவஞானபாடியம் - சூ. 1 அதி. 2) என்றது அறிக. ``தன்னை யொப்பாய் ... ... தலைமகன்`` என்றது, ஒருவனாதல் குறித்தபடி. ``ஏகோ ஹிருத்ர:`` (சுவேதாசுவதரம்) ``தன்னேரில்லோன் தானே காண்க`` (தி.8 திருவாசகம் - திருவண்டப்பகுதி 30) என்றதும் காணத்தக்கது. இவ்வாறாகவே இது, ``ஒன்றவன்றானே`` என்றதனை விளக்கியவாறாம். ``அப்பனும், அம்மையும்`` என்றது, ``உலகிற்கு முதல்வன்`` என்றதாம். இதுவும், முதற் கடவுள் இயல்பும், அவற்றைச் சிவபெருமான் உடையனாதலுங் கூறியது.