ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரிஅயற் காமே.

English Meaning:
THREE GODS
Hara, Hari And Aya
However much I may think for ages and ages
Of Him whose youth is eternal,
He who has no beginning or end, I cannot succeed
He too remains everywhere, however much Brahma and Vishnu
May describe His glory.
Tamil Meaning:
என்றும் ஒழியாது செய்கின்ற படைப்பும், காப்பும், அழிப்பும், அருளும் என்ற நான்கனையும் ஆராயுமிடத்தும் அவை அனைத்தையும் சோர்வின்றிச் செய்பவன் சிவபெருமான் ஒருவனே. ஆயினும், மெய்யுணர்ந்தோராகிய அவன்றன் அடியார்கள் சொல் கின்ற அளவில்லாத அவன் பெருமைகள் `மால், அயன்` என்னும் இருவர்க்கும் ஏற்ற பெற்றி பொருந்துவனவாம்.
Special Remark:
எனவே,`புண்ணிய மிகுதியால் அத்தொழில்களுள் சிலவற்றை இயன்ற அளவு பெற்று நடாத்துதல் பற்றி அவரும் ஒருபுடைத் தலைவராய் நிற்பர்` என்றவாறு. தோற்றத்தை ``இளமை`` என்றார்.
``அந்தம்`` என்றது உயிர்களின் அலைவிற்கு முடிவாதலை; எனவே, அஃது அருளலாயிற்று; இறுதியில் நிற்கற்பாலதாய அதனைச் செய்யுள் நோக்கி இடை வைத்தார்.
ஈறு - ஒடுக்கம். அளவியல் காலம், `தோற்றத்திற்குப் பின்னதாயும், ஈற்றிற்கு முன்னதாயும் இடைநிற்றலின் வரையறைப்பட்டு நிகழ்கின்ற காலம்; அஃது அதனை உடைத்தாகிய நிலைத்தொழிலின்மேல் நின்றது. மறைத்தலின் வகையே படைப்பு முதலிய மூன்றுமாகலின், அதனை வேறுவைத்து எண்ணாது,``நாலும் உணரில்`` என்றார். இத்தொழில் அனைத்தும் என்றும் நிகழ்வன வாகலின், அவற்றிற்கு, `அளவில்` என்ற அடை கொடுத்தார்.