ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

தேவர் பிரான்நம் பிரான் திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீருல கேழையும்
தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை
பாவு பிரான்அருள் பாடலு மாமே. 

English Meaning:
Sing Of Him
The Lord of Gods, and of ours too,
The Lord who all space pervades,
And the seven Worlds, ocean-bound, transcends;
None do know His nature true,
May we sing His Grace Divine!
Tamil Meaning:
சிவபெருமான் தேவர் பலர்க்கும் தலைவன்; நமக்கும் தலைவன்; உலகமுழுதும் நிறைந்து நிற்கும் நிறைவினன்; அவ்வாறு நிற்பினும் அவற்றை அகப்படுத்து அப்பால் நிற்கும் பெரியோன்; ஆதலின் அவனது தன்மையை முற்றும் அறிந்து துதிப்பவர் ஒருவரும் இல்லை. ஆயினும் எங்கும் நிறைந்த அவனது அருட்டன்மைகளை உயிர்கள் தாம் தாம் அறிந்தவாற்றால் பாடித் துதித்தலும் அமைவுடையதே.
Special Remark:
``தேவர் பிரான்`` முதலியவற்றைப் பல தொடராகக் கூறியது, அவற்றின் சிறப்புணர்த்தற்கு. காட்சிக்கு எய்துதல் பற்றி ``விரிநீர் உலகு ஏழையும்`` என நிலவுலகத்தையே கூறினாராயினும், மேல், ``திசை பத்தும்`` கூறினமையால் பிற உலகங்களும் கொள்ளப் படும். `முற்ற அறிய வாராமை பற்றி அவன் முனிதல் இல்லை; அறிந்த அளவு பாடின் உவப்பான்` என்பது கருத்து. ``யானறி அளவையின் ஏத்தி ஆனாது - நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின் - நின்னடி உள்ளி வந்தனென்`` (திருமுருகாற்றுப் படை. 277 - 279) என்றதும் காண்க. மேவுதல் - விரும்புதல்; அது, பற்றிநிற்றலைக் குறித்தது.