ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்

பதிகங்கள்

Photo

பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் நானே. 

English Meaning:
Greatness Unceasing
I will not cease to speak of Him, the Great, the Rare,
I will not cease to prate of Him, the Form Unborn,
I will not cease to talk of Nandi, the Mighty,
I will never cease, for pure and great am I then!
Tamil Meaning:
யாவரினும் பெரியவனும், யாவர்க்கும் அரியவனும், நால்வகைத் தோற்றத்துள் ஒன்றாகாது தன் இச்சையாற் கொள்ளப் படுவனவாய அருட்டிருமேனிகளை உடையவனும் ஆகிய எங்கள் சிவபெருமானைப் பிதற்றுதல் ஒருகாலும் ஒழியேன்; அதனால், நானே பெருமையை உடைய தவத்தை உடையவன்.
Special Remark:
பிதற்றுதல் போலுதலின், `பிதற்று` என்றார்; இது முதனிலைத் தொழிற்பெயர். ``பிதற்றொழியேன்`` என்பதனைச் சொற்பொருட்பின் வருநிலையாகப் பலகாற் கூறியது, வலியுறுத்தற் பொருட்டு. வேறு வேறு தொடராதலின், இஃது ஒருசொல்லடுக்கன்மை உணர்க. `பெரியானை` என்னும்
இரண்டனுருபு தொகுத்தலாயிற்று. `இத்தன்மையனை இடையறாது துதித்தல் தவமிலார்க்குக் கூடாது` என்றற்கு, `பெருமைத் தவன் நானே` என்றார். `தவமும் தவமுடையார்க்கே ஆகும்` (குறள் 262) என்றார் திருவள்ளுவ நாயனாரும்.
யானே தவமுடையேன்; என்நெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேஅக்
கைம்மா உரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயி னேன். -அம்மை திருவந்தாதி. 7
என்றது காண்க.