ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு
    நாலித ழானவை நாற்பத்து நாலுள
    பாலித ழானஅப் பங்கய மூலமாய்த்
    தானித ழாகித் தரித்திருந் தாளே.
  • 10. சொல்லவொண் ணாத சுடர்ப்பொதி மண்டலம்
    செல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள்
    வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகி
    மல்லவொண் ணாத மனோன்மனி தானே.
  • 100. அம்மையும் அத்தனும் அன்புற்ற தல்லது
    அம்மையும் அத்தனும் ஆரறிவார் என்னை
    அம்மையொ டத்தனும் யானும் உடனிருந்
    தம்மையொ டத்தனை யான்புரிந் தேனே.
  • 11. தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
    தானே சுடும்அங்கி ஞாயிறுந் திங்களும்
    தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
    தானே வடவரை தண்கடற் கண்ணே.
  • 12. கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர்
    மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணா
    பண்ணுடை யார்கள் பதைப்பற் றிருந்தவர்
    விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே.
  • 13. கண்டெண் டிசையும் கலந்து வருங்கன்னி
    பண்டெண் டிசையும் பராசத்தி யாய்நிற்கும்
    விண்டெண் டிசையும் விரைமலர் கைக்கொண்டு
    தொண்டெண் டிசையும் தொழநின்ற கன்னியே.
  • 14. கன்னி யொளியென நின்றஇச் சந்திரன்
    மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறம்
    சென்னி யிருப்பிடம் சேர்பதி னாறுடன்
    பன்னி யிருப்பப் பராசத்தி யாமே.
  • 15. பராசத்தி என்றென்று பல்வகை யாலும்
    தராசத்தி யான தலைப்பிர மாணி
    இராசத்தி யாமள ஆகமத் தாள்ஆங்
    குராசத்தி கோலம் பலஉணர்ந் தேனே.
  • 16. உணர்ந்துல கேழையும் யோகினி சத்தி
    உணர்ந்துயி ராய்நிற்கும் உன்அதன் ஈசன்
    புணர்ந்தொரு காலத்துப் போகம(து) ஆதி
    இணைந்து பரமென் றிசைந்திது தானே.
  • 17. இதுவப் பெருந்தகை எம்பெரு மானுள்
    பொதுவக் கலவியுள் போகமு மாகி
    மதுவக் குழலி மனோன்மனி மங்கை
    அதுவக் கலவியுள் ஆயுழி யோகமே.
  • 18. யோகநற் சத்தி ஒளிபீடந் தானாகும்
    யோகநற் சத்தி ஒளிமுகம் தெற்காகும்
    யோகநற் சத்தி உதரம் நடுவாகும்
    யோகநற் சத்திதாள் உத்தரம் தேரே.
  • 19. தேர்ந்தெழு மேலாம் சிவனங்கி யோடுற
    ஆர்ந்தெழு மாயையும் அந்தம தாய்நிற்கும்
    ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிடக்
    கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே.
  • 2. தரித்திருந் தாள்அவள் தன்னொளி நோக்கி
    விரித்திருந் தாள்அவள் வேதப் பொருளை
    குறித்திருந் தாள்அவள் கூறிய ஐந்தும்
    மறித்திருந் தாள்அவள் மாதுநல் லாளே.
  • 20. தானான வாறெட்ட தாம்பரைக் குள்மிசை
    தானான வாறும்ஈ ரேழும் சமகலை
    தானான விந்து சகமே பரமெனும்
    தானாம் பரவா தனையெனத் தக்கதே.
  • 21. தக்க பராவித்தை தான்இரு பானேழில்
    தக்கெழும் ஓர்ருத்தி ரஞ்சொல்லச் சொல்லவே
    மிக்கிடும் எண்சத்தி வெண்ணிற முக்கண்ணி
    தொக்கதை யோடுதொன் முத்திரை யாளே.
  • 22. முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தள்
    தத்துவ மாய்அல்ல வாய சகலத்தள்
    வைத்த பராபர னாய பராபரை
    சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே.
  • 23. கொங்கீன்ற கொம்பிற் குரும்பை குலாங்கன்னி
    பொங்கிய குங்குமத் தோளி பொருந்தினள்
    அங்குச பாசம்எனும் அகி லம்களி
    தங்கும் அவள்மனை தானறி வாயே.
  • 24. வாயும் மனமும் கடந்த மனோன்மனி
    பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
    ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
    தாயும் மகளும்நல் தாரமும் ஆமே.
  • 25. தாரமும் ஆகுவள் தத்துவ மாய்நிற்பள்
    காரண காரிய மாகும் கலப்பினள்
    பூரண விந்து பொதிந்த புராதனி
    பாரள வாந்திசை பத்துடை யாளே.
  • 26. பத்து முகமுடை யாள்நம் பராசக்தி
    வைத்தனள் ஆறங்கம் நாலுடன் தான்வேதம்
    ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே
    நித்தமாய் நின்றாள் எம் நேரிழை கூறே.
  • 27. கூறிய கன்னி குலாய பருவத்தள்
    சீறிய ளாய்உல கேழுந் திகழ்ந்தவள்
    ஆறிய நங்கை அமுத பயோதரி
    பேறுயி ராளி பிறிவறுத் தாளே.
  • 28. பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பெண்பிள்ளை
    குறியொன்றி நின்றிடும் கோமளக் கொம்பு
    பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே
    அறிவொன்றி நின்றனள் ஆருயி ருள்ளே.
  • 29. உள்ளத்தி னுள்ளே உடனிருந் தைவர்தம்
    கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்
    கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
    வள்ளற் றலைவி மருட்டிப் புரிந்ததே.
  • 3. மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப்
    பாதிநல் லாளும் பகவனும் ஆனது
    சோதிநல் லாளைத் துணைப்பெய்ய வல்லிரேல்
    வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.
  • 30. புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி
    இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார்
    பொருந்தி யிருந்த புதல்வி பூவண்ணத்
    திருந்த இலக்கில் இனிதிருந் தாளே.
  • 31. இருந்தனள் ஏந்திழை என்னுளம் மேவி
    திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந் துன்னி
    நிரந்தர மாகிய நீர்திசை ஓடு
    பொருந்த விலக்கில் புணர்ச்சி அதுவே.
  • 32. அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
    துதியது செய்து சுழியுற நோக்கில்
    விதியது தன்னையும் வென்றிட லாகும்
    மதிமல ராள்சொன்ன மண்டலம் மூன்றே.
  • 33. மூன்றுள மண்டலம் மோகினி சேர்விடம்
    ஏன்றுள ஈரா றெழுகலை உச்சியில்
    தோன்றும் இலக்குற லாகுதல் மாமாயை
    ஏன்றனள் ஏழிரண் டிந்துவொ டீறே.
  • 34. இந்துவி னின்றெழும் நாதம் இரவிபோல்
    வந்துபின் நாக்கின் மதித்தெழும் கண்டத்தின்
    உந்திய சோதி இதயத் தெழும் ஒலி
    இந்துவின் மேலுற்ற ஈறது தானே.
  • 35. ஈறது தான்முதல் எண்ணிரண் டாயிரம்
    மாறுதல் இன்றி மனோவச மாஎழில்
    தூறது செய்யும் சுகந்தச் சுழியது
    பேறது செய்து பிறந்திருந் தாளே.
  • 36. இருந்தனள் ஏந்திழை ஈ(று) அதில் ஆகத்
    திருந்திய ஆனந்தம் செந்நெறி நண்ணிப்
    பொருந்து புவனங்கள் போற்றிசெய் தேத்தி
    வருந்த இருந்தனள் மங்கைநல் லாளே.
  • 37. மங்கையும் மாரனுந் தம்மொடு கூடிநின்
    றங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர்
    கொங்கைநல் லாருங் குமாரர்கள் ஐவரும்
    தங்களின் மேவிச் சடங்குசெய் தார்களே.
  • 38. சடங்கது செய்து தவம்புரி வார்கள்
    கடந்தனி னுள்ளே கருதுவ ராயின்
    தொடர்ந்தெழு சோதி துணைவழி ஏறி
    அடங்கிடும் அன்பின தாயிழை பாலே.
  • 39. பாலித் திருக்கும் பனிமலர் ஆறினும்
    ஆலித் திருக்கும் அவற்றின் அகம்படி
    சீலத்தை நீக்கத் திகழ்ந்தெழு மந்திரம்
    மூலத்தின் மேலது முத்தது வாமே.
  • 4. வெள்ளடை யான்இரு மாமிகு மாமலர்க்
    கள்ளடை ஆரக் கமழ்குழ லார்மனம்
    மள்ளடை யானும் வகைத்திற மாய்நின்ற
    பெண்ணொரு பாகன் பிறவிபெண் ணாமே.
  • 40. முத்து வதனத்தி முகந்தொறும் முக்கண்ணி
    சத்தி சதுரி சகளி சடாதரி
    பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி
    வித்தகி என்னுள்ளம் மேவிநின் றாளே.
  • 41. மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ்எரி
    தாவிய நற்பதத் தண்மதி அங்கதிர்
    மூவருங் கூடி முதல்வியாய் முன்னிற்பர்
    ஓவினும் மேலிடும் உள்ளொளி ஆமே.
  • 42. உள்ளொளி மூவிரண் டோங்கிய அங்கங்கள்
    வெள்ளொளி அங்கியின் மேவி அவரொடும்
    கள்ளவிழ் கோதைக் கலந்துட னேநிற்கும்
    கொள்ளவி சித்திக் கொடியமு தாமே.
  • 43. கொடிய திரேகை குருவுள் ளிருப்பப்
    படிவது வாருணைப் பைங்கழல் ஈசன்
    வடிவது ஆனந்தம் வந்து முறையே
    இடுதல் ஆறங்கம் ஏந்திழை யாளே.
  • 44. ஏந்திழை யாரும் இறைவர்கள் மூவரும்
    காந்தாரம் ஆறும் கலைமுதல் ஈரெட்டும்
    மாந்தர் உளத்தியும் மந்திரர் ஆயமும்
    சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே.
  • 45. சத்தி என்பாள்ஒரு சாதகப் பெண்பிள்ளை
    முத்திக்கு நாயகி என்ப தறிகிலர்
    பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள்
    கத்திய நாய்போல் கதறுகின் றாரே.
  • 46. ஆரே திருவின் திருவடி காண்பர்கள்!
    நேரேநின் றோதி நினையவும் வல்லார்க்குக்
    காரேய் குழலி கமல மலரன்ன
    சீரேயுஞ் சேவடி சிந்தைவைத் தாளே.
  • 47. சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து
    முந்தையில் வைத்துத்தம் மூலத்தி லேவைத்து
    நிந்தையில் வையா நினைவதி லேவைத்துச்
    சந்தையில் வைத்துச் சமாதிசெய் வீரே.
  • 48. சமாதிசெய் வார்கட்குத் தான்முத லாகிச்
    சிவாதியில் ஆகும் சிலைநுத லாளை
    நவாதியில் ஆக நயந்தது ஓதில்
    உவாதி அவளுக் குறைவில தாமே.
  • 49. உறைபதி தோறும் உறைமுறை மேவி
    நறைகமழ் கோதையை நாள்தொறும் நண்ணி
    மறையுட னேநிற்கும் மற்றுள்ள நான்கும்
    இறைதிளைப் போதிடில் எய்திட லாமே.
  • 5. பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை
    பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது
    பெண்ணிடை ஆணின் பிறப்பறிந் தீர்க்கின்ற
    பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாறே.
  • 50. எய்திட லாகும் இருவினை யின்பயன்
    கொய்தளிர் மேனிக் குமரி குலாம்கன்னி
    மைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடு
    கைதவம் இன்றிக் கருத்துறு மாறே.
  • 51. கருத்துறுங் காலம் கருது மனமும்
    திருத்தி யிருந்தவை சேரும் நிலத்து
    ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மேன்மேல்
    இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆமே.
  • 52. ஆமைஒன் றேறி அகம்படி யான்என
    ஓமஎன் றோதிஎம் உள்ளொளி யாய்நிற்கும்
    தாம நறுங்குழல் தையலைக் கண்டபின்
    சோம நறுமலர் சூடிநின் றாளே.
  • 53. சூடிடும் அங்குச பாசத்துளை வழி
    கூடும் இருவளை கோலக்கைக் குண்டிகை
    நாடும் இருபதம் நன்னெடு ருத்திரம்
    ஆடிடம் சீர்புனை ஆடக மாமே.
  • 54. ஆம்அயன் மால் அரன்ஈசன் சதாசிவன்
    தாம்அடி சூடிநின் றெய்தினர் தம்பதம்
    காமனும் சாமன் இரவி கனலுடன்
    சோமனும் வந்தடி சூடநின் றாளே.
  • 55. சூடும் இளம்பிறை சூலி கபாலினி
    நீடும் இளங்கொடி நின்மலி நேரிழை
    நாடி நடுவிடை ஞாளம் உருவநின்
    றாடும் அதன்வழி அண்ட முதல்வியே.
  • 56. அண்ட முதலா அவனி பரியந்தம்
    கண்டதொன் றில்லைக் கனங்குழை யல்லது
    கண்டனும் கண்டியு மாகிய காரணம்
    குண்டிகை கோளிகை கண்டத னாலே.
  • 57. ஆலம்உண் டான்அமு தாங்கவர் தம்பதம்
    சாலவந் தெய்தும் தவத்தின்பந் தான்வரும்
    கோலிவந் தெய்தும் குவிந்த பதவையே
    டேலவந் தீண்டி யிருந்தனள் மேலே.
  • 58. மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்தெய்தக்
    காலால் வருந்திக் கழிவர் கணத்திடை
    நாலாம் நளினம்நின் றேற்றிநட் டுச்சிதன்
    மேலாம் எழுத்தினல் ஆமத்தி னாளே.
  • 59. ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள்
    ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள்
    நாமம் நமசிவ யவ்வென் றிருப்பார்க்கு
    நேமத் துணைவி நிலாவிநின் றாளே.
  • 6. பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை
    மாச்சற்ற சோதி மனோன்மனி மங்கையாம்
    காச்சற்ற சோதி கடவு ளுடன்புணர்ந்
    தாச்சற்றெ னுட்புகுந் தாலிக்குந் தானே.
  • 60. நிலாமய மாகிய நீள்படி கத்தி
    சிலாமய மாகுஞ் செழுந்தர ளத்தி
    சுலாமய மாகும் சுரிகுழற் கோதை
    கலாமய மாகக் கலந்துநின் றாளே.
  • 61. கலந்துநின் றாள்கன்னி காதல னோடும்
    கலந்துநின் றாள்உயிர்க் கற்பனை யெல்லாம்
    கலந்துநின் றாள்கலை ஞானங்கள் எல்லாம்
    கலந்துநின் றாள்கன்னி காலமு மாயே.
  • 62. காலவி எங்கும் கருத்தும் அருத்தியும்
    கூலவி ஒன்றாகும் கூடல் இழைத்தனள்
    மாலினி மாகுலி மந்திர சண்டிகை
    பாலினி பாலவன் பாகம தாகுமே.
  • 63. பாகம் பராசத்தி பைம்பொற் சடைமுடி
    ஏக இருதயம் ஈரைந்து திண்புயம்
    மோக முகம்ஐந்து முக்கண் முகந்தொறும்
    நாகம் உரித்து நடம்செய்யும் நாதற்கே.
  • 64. நாதனும் நாலொன்ப தின்மருங் கூடிநின்
    றோதிடும் கூடங்கள் ஓரைந் துளஅவை
    வேதனும் ஈரொன் பதின்மரும் மேவிநின்
    றாதியும் அந்தமும் ஆகிநின் றாளே.
  • 65. ஆகின்ற நாள்களில் ஐம்பத் தொருவர்கள்
    ஆகிநின் றார்களில் ஆருயி ராம்அவள்
    ஆகிநின் றாள்உட னாகிய சக்கரத்
    தாகிநின் றான்அவன் ஆயிழை பாடே.
  • 66. ஆயிழை யாளொடும் ஆதிப் பரனிடம்
    ஆயதொ ரண்டவை ஆறும் இரண்டுள
    ஆய மனந்தொ றாறுமுக மாமவற்
    றேய குழலி இனிதுநின் றாளே.
  • 67. நின்றனள் நேரிழை யோடுடன் நேர்பட
    இன்றென் அகம்படி ஏழும் உயிர்ப்பெய்தும்
    துன்றிய ஓரொன் பதின்மரும் சூழலுள்
    ஒன்றுயர் வோதி உணர்ந்துநின் றாளே.
  • 68. உணர்ந்தெழு மந்திரம் ஓம்எனும் உள்ளே
    மணந்தெழு மாகதி யாகிய தாகும்
    கொணர்ந்தெழு சூதனும் சூதியும் கூடிக்
    கணந்தெழும் காணும்அக் காமுகை யாமே.
  • 69. ஆமது அங்கியும் ஆதியும் ஈசனும்
    மாமது மண்டலம் மாருத மாதியும்
    ஏமது சீவன் சிகைஅங் கிருண்டிடக்
    கோமலர்க் கோதையும் கோதண்ட மாகுமே.
  • 7. ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மனி
    பாலித் துலகில் பரந்துபெண் ணாகும்
    வேலைத் தலைவியை வேத முதல்வியை
    ஓலித் தொருவன் உகந்துநின் றானே.
  • 70. ஆகிய கோதண்டத் தாகும் மனோன்மனி
    ஆகிய ஐம்ப துடனே அடங்கிடும்
    ஆகும் பராபரை யோடப் பரைஅவள்
    ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே.
  • 71. தானிகழ் மோகினி சார்வான யோகி
    போன மயமுடை யார்அடி போற்றுவர்
    ஆனவர் ஆவியின் ஆகிய அச்சிவந்
    தானாம் பரசிவம் மேலது தானே.
  • 72. தானந்தம் மேலே தருஞ்சிகை தன்னுடன்
    ஆனந்த மோகினி யாம்பொற் றிருவோடு
    மோனையில் வைத்து மொழிதரு கூறது
    ஆனவை ஓம்எனும் அவ்வுயிர் மார்க்கமே.
  • 73. மார்க்கங்கள் ஈன்ற மனோன்மனி மங்கலி
    யார்க்கும் அறிய அரியாள் அவளாகும்
    வாக்கும் மனமும் மருவஒன் றாவிட்டு
    நோக்கும் பெருமைக்கு நுண்ணறி வாமே.
  • 74. நுண்ணறி வாகும் நுழைபுலம் மாந்தர்க்கு
    பின்னறி வாகும் பிரானறி(வு) அத்தடம்
    செந்நெறி யாகும் சிவகதி சேர்வார்க்குத்
    தன்னெறி யாமது சன்மார்க்க மாமே.
  • 75. சன்மார்க்க மாகச் சமைதரு மார்க்கமும்
    துன்மார்க்க மானவை யெல்லாம் துரந்திடும்
    நன்மார்க்கத் தேவரும் நன்னெறி யாவதும்
    சன்மார்க்கத் தேவியும் சத்திஎன் பாளே.
  • 76. சத்தியும் நானும் சயம்புவும் அல்லது
    முத்தியை யாரும் முதல்அறிவா ரில்லை
    அத்திமேல் வித்திடின் அத்தி பழுத்தக்கால்
    மத்தியில் ஏற வழியது வாமே.
  • 77. அதுஇது என்றவ மேகழி யாதே
    மதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப்
    பதிமது மேவிப் பணியவல் லார்க்கு
    விதிவழி தன்னையும் வென்றிட லாமே.
  • 78. வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
    வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
    வென்றிட லாகும் விழைபுலன் றன்னையும்
    வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே.
  • 79. ஓரைம்ப தின்மருள் ஒன்றியே நின்றது
    பாரம் பரியத்து வந்த பரமது
    தாரங் குழலாளும் அப்பதி தானும்முன்
    சாரும் பதம்இது சத்திய மாமே.
  • 8. உகந்துநின் றான்நம்பி ஒண்ணுதற் கண்ணோ
    டுகந்துநின் றான்நம் முழைபுக நோக்கி
    உகந்துநின் றான்இவ் வுலகங்க ளெல்லாம்
    உகந்துநின் றான்அவ டன்றோ டொகுத்தே.
  • 80. சத்தியி னோடு சயம்புவும் நேர்படில்
    வித்தது இன்றியே எல்லாம் விளைந்தன
    அத்தகை யாகிய ஐம்பத் தொருவரும்
    சித்தது மேவித் திருந்திடு வாரே.
  • 81. திருந்து சிவனும் சிலைநுத லாளும்
    பொருந்திய வானவர் போற்றிசெய் தேத்த
    அருந்திட அவ்விடம் ஆரமு தாக
    இருந்தனர் தானம் இளம்பிறை யென்றே.
  • 82. என்றும் எழுகின்ற ஏரினை எய்தினோர்
    தன்றது வாகுவர் தாழ்குழ லாளொடு
    மன்றரு கங்கை மதியொடு மாதவர்
    துன்றிய தாரகை சோதிநின் றாளே.
  • 83. நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட
    ஒன்றிய துள்ளொளி யாலே உணர்ந்தது
    சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
    துன்றிடும் ஞானங்கள் தோன்றிடுந் தானே.
  • 84. தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி
    ஈன்றிடும் ஆங்கவள் எய்திய பல்கலை
    மான்றரு கண்ணியும் மாரனும் வந்தெதிர்
    சான்றது வாகுவர் தாம்அவ ளாயுமே.
  • 85. ஆயும் அறிவுங் கடந்(து) அணு வோரணி
    மாயம தாகி மதோமகி ஆயிடுஞ்
    சேய அரிவை சிவானந்த சுந்தரி
    நேயம் தாம்நெறி யாகிநின் றாளே.
  • 86. நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்
    பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும்
    குறியது கூடிக் குறிக் கொண்டு நோக்கும்
    அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே.
  • 87. ஆமயன் மால்அரன் ஈசன்மேல் ஆம்கதி
    ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத்
    தேமயன் நாளும் தெனாதெனா என்றிடும்
    மாமய மானது வந்தெய்த லாமே.
  • 88. வந்தடி போற்றுவர் வானவர் தானவர்
    இந்து முதலாக எண்டிசை யோர்களும்
    கொந்தணி யுங்குழ லாளொடு கோனையும்
    வந்தனை செய்யும் வழிநவில் வீரே.
  • 89. நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபம்
    கவற்றிய கந்தம் கவர்ந்தெரி தீபம்
    பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை
    அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை யாமே.
  • 9. குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
    துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழி
    புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்
    தொத்த கருத்தது சொல்லகி லேனே.
  • 90. தாங்கி உலகில் தரித்த பராபரன்
    ஓங்கிய காலத் தொருவன் உலப்பிலி
    பூங்கிளி தாங்கும் புரிகுழலாள் அன்று
    பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே.
  • 91. பொற்கொடி மாதர் புனைகழல் ஏத்துவர்
    அங்கொடி மாதுமை ஆர்வத் தலைமகள்
    நற்கொடி மாதை நயனங்கள் மூன்றுடை
    விற்கொடி மாதை விரும்பி விளங்கே.
  • 92. விளங்கொளி யாய விரிசுடர் மாலை
    துளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கக்
    களங்கொள் மணியுடன் காம வினோதம்
    உளங்கொள் இலம்பியம் ஒன்று தொடரே.
  • 93. தொடங்கி உலகினில் சோதி மணாளன்
    அடங்கி யிருப்பதென் அன்பின் பெருமை
    விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை
    ஒடுங்க உமையொடும் ஓருரு வாமே.
  • 94. உருவம் பலஉயி ராவல்ல நந்தி
    தெருவம் புகுந்தமை தேர்வுற நாடின்
    புரிவளைக் கைச்சினம் பொன்னணி மாதை
    மருவி இறைவன் மகிழ்வன மாயமே.
  • 95. மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித்
    தாயம் புணர்க்கும் சலதி அமலனைக்
    காயம் புணர்க்கும் கலவியுள் மாசத்தி
    ஆயம் புணர்க்கும்அவ் வியோனியு மாமே.
  • 96. உணர்ந்தொழிந் தேன்அவ னாம்எங்கள் ஈசனைப்
    புணர்ந்தொழிந் தேன்புவ னாபதி யானை
    அணைந் தொழிந் தேன்எங்கள் ஆதிதன் பாதம்
    பிணைந்தொழிந் தேன்தன் அருள்பெற்ற வாறே.
  • 97. பெற்றாள் பெருமை பெரிய மனோன்மனி
    நற்றாள் இறைவனே நற்பய னேஎன்பர்
    கற்றான் அறியும் கருத்தறி வார்கட்குப்
    பொற்றாள் உலகம் புகல்தனி யாமே.
  • 98. தனிநா யகன்றனோ டென்நெஞ்சம் நாடி
    இனியாள் இருப்பிடம் ஏழுல கென்பர்
    பனியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக்
    கனியா நினைவதென் காரண அம்மையே.
  • 99. அம்மனை அம்மை அரிவை மனோன்மனி
    செம்மனை செய்து திருமக ளாய்நிற்கும்
    இம்மனை செய்த இருநில மங்கையும்
    அம்மனை யாகி அமர்ந்துநின் றாளே.