ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர்
மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணா
பண்ணுடை யார்கள் பதைப்பற் றிருந்தவர்
விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே.

English Meaning:
The Humans Who Reach her are Above Gods

They who reach Her, of Compassion Divine
Well may they be here on earth below
Yet regard them not as humans;
Divine are their qualities;
Serene is their composure
Higher than Celestials are they.
Tamil Meaning:
எவ்விடத்தையும் தனதாக உடைய சத்தியைக் கூடி அவளுடன் எங்கும் வியாபகமாய் நின்ற அறிவர் சிவத்தன்மை பெற்றவர்; சீவத் தன்மையாகிய முனைப்பு நீங்கியவர். அதனால் பர வெளியில் நிற்பவராகிய அவரை மிக்க மேன்மை உடையவராக அறிந்து, மண்ணில், வாழ்பவராகிய மனிதரில் வைத்து எண்ணா தொழிதல் வேண்டும். (`விண்ணில் வாழும் கடவுளரில் வைத்து எண்ணல் வேண்டும்` என்றபடி).
Special Remark:
``கண்`` என்பது மேலை மந்திரத்தில் வந்தவாறே வந்தது. இதற்கு, `விழி - நெற்றிக்கண்` என உரைத்தற்கு ஓர் இயை பின்மை அறிக. இரண்டாம் அடியில் நின்ற ஐகாரம் சாரியை. `மண் ணுடையாராகிய மனிதர்` என்க. பண் - பண்ணப்படுதல்; செம்மை யாக்கப்படுதல். இரண்டாம் அடியை இறுதியில் கூட்டியுரைக்க.
இதனால், சத்தியது ஆதாரமாய் நிற்கும் நிலையை உலகில் வைத்து உணர்பவர் ஏகதேச உணர்வு நீங்கி வியாபக உணர்வைப் பெறுதல் கூறப்பட்டது. சத்தியது ஆதார ஆதேயமாம் நிலையை உலகில் வைத்து உணர்தலை, `பாரயோகம்` என்பர்.