ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

தாங்கி உலகில் தரித்த பராபரன்
ஓங்கிய காலத் தொருவன் உலப்பிலி
பூங்கிளி தாங்கும் புரிகுழலாள் அன்று
பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே.

English Meaning:
Adore Parasakti Who Holds Parapara

Parapara that is immanent here below
And sustains all,
Eternal and Indestructable is He;
She of yore shared Her Form with Him,
She who holds the lovely parrot in Her hand,
And sports wavy tresses
She, Parasakti
Do adore Her!
Tamil Meaning:
உலகத் தோற்றத்திற்கு முன்னும், ஒடுக்கத்திற்குப் பின்னும் ஒருவனேயாய் உள்ள சிவன், உலகைத் தொழிற்படுத்தி நிற்குங் காலத்தில், சத்தியை ஒருபாற் கொண்டு அவளோடு உடனாய் இருவராயே நிற்கின்றான், ஆதலின், மாணவகனே, நீ சிவனோடு சத்தியையும் உடன் வைத்தே வழிபடு.
Special Remark:
இரண்டாம் அடியை முதற்கண் வைத்து உரைக்க. தாங்குதலும் உவகை என்க. தரித்தல், நிலைபெறுதல், `தன்னைத் தாங்குவார் பிறரின்றித் தானே நிலைபெறுகின்றான்` என்றற்கு, ``தரித்த`` என்றார். ``பராபரன்`` என்றது, ``பராபரன் ஆயது`` எனக் குறிப்பு வினைப்பெயராய், ``பாங்குடன் ஏற்ப`` என்பதனோடு முடிந்தது. ஓங்கிய காலம், உலகம் விரிந்த காலம்; இஃது அதன் தொடக்க நிலையைக் குறித்தது. ``ஒருவன்`` என்பது பின்னும் சென்று இயையும். ``உலப்பிலி`` எனவே, உலகம் உலந்தமை பெறப்பட்டது. சிவன் `பூங்கிளி தங்கும்` என்பது பாடமன்று. சத்தியோடு கூடினவனாய் நின்றே உலகைச் செயற்படுத்தலின், அவனை அவ்வாற்றானே வழிபடுதல் வேண்டும் என விளக்கியவாறு, `சத்தியோடு` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. `சத்தியோடே போற்று` என ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டி உரைக்க.
இதனால், சிவனைச் சிலர் சத்தியை நீக்கி வழிபடுதலும் கூடாததாதல் கூறப்பட்டது.