ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

வந்தடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதலாக எண்டிசை யோர்களும்
கொந்தணி யுங்குழ லாளொடு கோனையும்
வந்தனை செய்யும் வழிநவில் வீரே.

English Meaning:
Worship Siva-Sakti and be Worshipped by Celestials

The Celestials, Vanavas and Dhanavas*
Will come to you and worship your feet,
And Indra and other Gods too in direction eight;
Seek therefore the way of worship to reach
The Mother of tresses, in flower clusters festooned,
And Her Lord, too.
Tamil Meaning:
சத்தியையும், சிவனையும் அடைய விரும்புவர் யாராயினும் அவர்களை வழிபட்டு அடைதல் அல்லது, பிறிதொரு வழியாலும் அடைய வல்லுநரல்லர். ஆதலின், மக்களில் அவர்களை அடைய விரும்பும் நல்லீர், நீவிரும் அதன் பொருட்டு அவர்களை வழிபடுதலையே நெறியாகக் கொண்டு பயிலுங்கள்.
Special Remark:
மூன்றாம் அடியை முதலிற் கொண்டு, ``வந்தடி போற்றுவர்`` என்பதை இரண்டாம் அடியின் இறுதியிற் கூட்டி, அதன் பின், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவித்து உரைக்க. இந்து - சந்திரன்; இவனும் வடக்கிற்குத் தலைவன். வந்தனை செய்தலையே `வழி` என்றார் ஆகலின், அவ்விடத்துப் பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம். நவிலுதல் - பயிலுதல்.
இதனால், சிவன், சத்தி இவர்களை வழிபாட்டினால் அல்லது அடையலாகாமை கூறப்பட்டது.