ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிட லாகும் விழைபுலன் றன்னையும்
வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே.

English Meaning:
She is Conqueror Supreme

Well may they decreed Fate conquer,
Well may they Karmaic Pasa conquer,
Well may they desire-ridden Senses conquer,
Well may all these know
The Mother that conquers all.
Tamil Meaning:
யாவரது ஆற்றலையும், எப்பொருளது ஆற்றலை யும் வெல்லும் பேராற்றலை உடையவளாகிய சிவ சத்தியினது உண்மை நிலையைத் தவத்தால் உணர வல்லவர்க்கு` விதியின் வழி யாகிய பிறப்பு, அப்பிறப்பிற்கு முதலாகிய `வினை, எனப்படுகின்ற அந்தப் பெரியகட்டு, அதனால், வந்து சார்ந்து மயக்குகின்ற ஐம் புலன்கள் என்னும் இவ்வனைத்துத் தீமைகளையும் வெல்லுதல் கூடும்.
Special Remark:
இது சொற்பொருட் பின்வருநிலை, ``விழைபுலன்`` என்றது, `ஆசையை விளைத்து மயக்குகின்ற புலன்` என்னும் குறிப்பினதான உடம்பொடு புணர்த்தல். ``தன்னை`` என ஒருமையாற் கூறியது, `ஒருகாலத்து வருவது ஒன்றேயாயினும், ஒவ்வொன்றும் அத்தன்மையது` என்றற்கு. காம இன்பத்தை, ஒருகாலத்தே ஐம்புலனும் நுகரப்படுவதாகக் கூறுதல் விரைவு பற்றியாதலின், அதனிடத்தும், ஐம்புலன்கள் நுகரப்படுதல் ஒரு காலத்து ஒன்றேயாம் என்க. மங்கை தன் மெய்யுணர்வார்க்கும் அவளது ஆற்றல் உளதாம் ஆதலின் மேற்கூறிய எல்லாம் அவர்க்குக் கூடும் என்பார், ``வென்றிடு மங்கைதன் மெய்யுணர்வோர்க்கே`` என்றார்.
இதனால், மெய்யுணர்வே தீமை அனைத்தையும் முற்றப் போக்குவதாதல் கூறப்பட்டது.