ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்தெய்தக்
காலால் வருந்திக் கழிவர் கணத்திடை
நாலாம் நளினம்நின் றேற்றிநட் டுச்சிதன்
மேலாம் எழுத்தினல் ஆமத்தி னாளே.

English Meaning:
Worship Sakti in Yoga Way

That their tapas high may wax
They walk from place to place
And soon perish;
There She is in four petalled Muladhara
Stand there and worship on top of Cranium,
She is of Letter Exalted (Aum)
And beauty surpassing possessed.
Tamil Meaning:
உணவுப் பொருளாய் நின்று உடம்பையும், அது வழியாக உயிரையும் வளப்பவளாகிய சத்தி, நாலிதழ்த் தாமரையாகிய மூலாதாரத்திலிருந்து மேலேற்றிப் பல ஆதாரங்களில் ஊன்றப்பட்டு முடிவில் தலைக்குமேல் உள்ள துவாதசாந்தத்தில் முடிகின்ற பிரணவ வடிவாய் இருந்து அருள் புரிகின்றாள். இதனை யறியாது, பலர் மேலாகிய ஞானயோகம் முதிர்தற்பொருட்டு மலை, காடு, தீர்த்தக்கரை முதலிய இடங்களை அடைந்து துன்புற்று விரைய இறந்தொழி கின்றார்கள்.
Special Remark:
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. ``ஏத்தி`` என்பது பாடமாயின், `ஓதி` என உரைக்க. நட்டு, நடப்பட்டு, ஆமம் - உணவுப் பொருள். `பிறர் கணத்திடைக் கழிவர்` என்றதனால், யோகத்தினர் நீண்ட நாள் வாழ்தல் பெறப்படும்.
இதனால், `சத்தியைப் பிரணவ யோகத்தினாலே தலைப்படல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.