ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

சத்தியி னோடு சயம்புவும் நேர்படில்
வித்தது இன்றியே எல்லாம் விளைந்தன
அத்தகை யாகிய ஐம்பத் தொருவரும்
சித்தது மேவித் திருந்திடு வாரே.

English Meaning:
Jnana Through Letters Fifty-One

When Sakti and Siva united
All creation, without seed, arose;
And thus was it with the Fifty-one Letters and their deities
Acquiring Jnana, Jivas Perfection attained.
Tamil Meaning:
சத்தியும், சிவமும் ஒருவர்க்கு உண்மையாற் கிடைப்பார்களாயின், எல்லாப் பயன்களும் அவற்றுக்கு உரிய காரணங்கள் இல்லாமலேயும் விளைந்து விடும். ஆதலால், அப் பொழுது ஐம்பத்தோர் அக்கரங்களின் அதிதேவர்களும் அச் சத்தி சிவங்களின் வழிபட்டபொழுது அவர்கள் உயிரினிடத்தும் கொடுமை நெறியின் நீங்கிச் செம்மையின் நிற்பவராவர்.
Special Remark:
சத்தி சிவங்கள் எப்பொருளிலும் எக்காலத்தும் நீங்கி நிற்றல் இல்லையாகலின், ``நேர்படில்`` என்றது, பொதுமையானன்றி, உண்மையாற் கிடைத்தலையாயிற்று. ஆகவே, ``அத்தகையாகிய`` என்றதும், உண்மையால் நிற்கும் சத்தி சிவங்கட்கு ஆதாரமாதலை யாயிற்று. `தகையர் ஆகிய` எனற்பாலதனை ஆகுபெயரால், `தகையாகிய` என்றார். ``அத்தகையராய் மேவித் திருந்திடுவார்` என்பது கருத்தாயிற்று. மேல், ``ஓரைம்பதின்மருள்`` எனக்கூறி, இங்கு, ``ஐம்பத்தொருவரும்`` என்றது இரண்டும் மரபாதல் பற்றியாதலின், மலைவின்மை அறிக. ``சித்து`` என்றது உயிரை. ``வித்தது, சித்தது`` என்பதில் அது, பகுதிப் பொருள் விகுதி. அத்தகையராய்த் திருந்துத லாவது, உலகியல் உணர்வை எழுப்பாது, மெய்ந்நெறி உணர்வை எழுப்புதல். இவர் இங்ஙனம் திருந்துதலை வலியுறுத்தற்கே முதலிரண் டடிகள் கூறப்பட்டன. வித்தின்றியே விளைதல், வினை முதலிய பிற நிமித்தங்கள் இன்றி அருளே நிமித்தமாக விளைதல். தெளிவு பற்றி எதிர்காலத்தை ``விளைந்தன`` என இறந்தகாலமாக்கிக் கூறினார்.
இதனால் எழுத்து முறை வழிபாட்டால் மேற் (1215) கூறிய மங்கைதன் மெய்யுணர்வு பிறத்தல் கூறப்பட்டது.