ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

நாதனும் நாலொன்ப தின்மருங் கூடிநின்
றோதிடும் கூடங்கள் ஓரைந் துளஅவை
வேதனும் ஈரொன் பதின்மரும் மேவிநின்
றாதியும் அந்தமும் ஆகிநின் றாளே.

English Meaning:
She stood Beyond Tattvas Thirty-Six

The Jiva and Tattvas four times nine
Are there;
Among them are the active group of Five (Senses);
In the body so constituted
She stands as Beginning and End,
Praised by Brahma and the twice-nine Ganas.
Tamil Meaning:
தலைவனாகிய இறைவனும், அவனால் செயற் படுத்தப்பட்ட முப்பத்தாறு தத்துவங்களும் ஏற்ற பெற்றியால் பொருந்தி நிற்பவனவாகச் சொல்லப்படுகின்ற நிலையங்கள் ஐந்து உள்ளன. அவைகளில் பிரமன் முதலியோரும், பதினெண், கணங்களும், வந்து வணங்கச் சத்தி அவற்றிற்கு முதலும், முடிவுமாகி நிற்கின்றாள்.
Special Remark:
ஐந்து நிலையங்கள் என்றது. `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் ஐந்து கலைகளை. இவைகளிலே முப்பத்தாறு தத்துவங்கள் முதலிய பிற அத்துவாக்கள் ஐந்தும் அவற்றிற்கு ஏற்ற பெற்றியால் அடங்கி நிற்க, இறைவனும் பெற்றியால் ஆதியும் அந்தமுமாம் தலைவனாய் நிற்றலின், சத்தியும் அங்கு அவ்வாறு நிற்கின்றாள் என்க. ``வேதனும் ஈரொன்பதின்மரும் மேவ நின்று`` என்றது, அவளது பெருமை கூறியவாறு. `அவை மேவ` என இயையும். `பதினெண் கணத்தவர் இவர்` என்பதை
``விரவுசா ரணரே, சித்தர், விஞ்சையர், பசாசர், பூதர்,
கருடர்,கின் னரர், இயக்கர், காந்தர்வர், சுரர், தைத்தியர்,
உரகர் ஆகாச வாசர் உத்தர குருவோர் யோகர்
நிருதர்,கிம் புருடர், விண்மீன் நிறைகணம், மூவா றாமே`` 1
என்பதனான் அறிக. தைத்தியர் - அசுரர். நிருதர் - இராக்கதர். உத்தர குரு - போக பூமி. யோகர் - முனிவர். ``விண்மீன்`` என்றதும் அவற்றிற்குத் தலைவரை.
இதனால், சத்தி பஞ்சகலைகளிலும் ஏற்ற பெற்றியால் அனைத்திற்கும் ஆதியும், அந்தமுமாய் நிற்றல் கூறப்பட்டது.