ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

சன்மார்க்க மாகச் சமைதரு மார்க்கமும்
துன்மார்க்க மானவை யெல்லாம் துரந்திடும்
நன்மார்க்கத் தேவரும் நன்னெறி யாவதும்
சன்மார்க்கத் தேவியும் சத்திஎன் பாளே.

English Meaning:
Sakti is Mistress of Sanmarga

The (Jnana) Way becomes Sanmarga (Good) Way
Drives away all evil ways,
From that good Way,
All good deeds arise
Of that Sanmarga,
Sakti indeed the Mistress is.
Tamil Meaning:
ஒன்றாக அமைந்த நன்னெறி ஏனை தீநெறிகள் பலவற்றையும் போக்கிவிடும்; அந்நன்னெறிக்கு முதல்வராய கடவுள ராயும், அவரால் தோற்றுவித்துக் காக்கப்படும் அந்நன்னெறியாயும், அந்நன்னெறியால் அடையப்படும் அருட் சத்தியாயும் உள்ளவள், தலைமை பற்றி, `சத்தி` என்று, அடைகொடாது யாவராலும் சொல்லப்படுகின்ற சிவசத்தியேயாவாள்.
Special Remark:
``சன்மார்க்கமாக`` என்றது, ``தான் ஒன்றே முழு நன் னெறியாக` என்னும் குறிப்பினதும், `சமைதரு` என்றது, `இயற்கையில் அமைந்த` என்னும் குறிப்பினதுமாயின, ``சமைதரு மார்க்கமும்`` என்னும் உம்மை, சிறப்பு. ``துன்மார்க்கமானவை`` என்றது, முழுத் தீமை முதலாகச் சிறிதே தீமையுடையது ஈறாக உள்ள ஏனை எல்லா நெறிகளையும், `மேற்குறித்த முழு நன்னெறி முதலியவாகக் கூறிய மூன்றுமாயிருப்பவள் சிவசத்தியே எனக் கூறிய அதனால், `அவ்வொன்றாய நன்னெறி சிவநெறியே` என்பது பெறப்பட்டது.
``முன்னெறி யாகிய முதல்வன், முக்கணன்
றன்னெறி யேசர ணாதல் திண்ணமே``
(திருமுறை - 4)
என அப்பரும் அருளிச் செய்தார். நன்னெறியாவது சிவநெறி` எனவே, அதற்கு முதல்வராவார் சதாசிவர், மகேசுவரர், உருத்திரர் முதலியோ ராதல் பெறப்பட்டது. அவர் சிவநெறியைத் தோற்றுவித்தலாவது, தம்பால் கேட்டற்கு உரியவர்கட்கு அதனை அறிவுறுத்தல். அதனைக் காத்தலாவது, ஆசிரிய மாணாக்கர் முறையால் வழிவழியாக விளங்கி வரச் செய்தல். சிவசத்தி நன்மார்க்கத் தேவர் முதலாக நிற்றல் கூறுவார், அந் நன்மார்க்கத்துச் சிறப்பினை முதற்கண் எடுத்துக் கூறினார்.
இதனால், சத்தி, மேற்கூறிய செந்நெறி முதலியனவாய் நின்று உயிர்கட்கு அருள்புரிதல் கூறப்பட்டது.