ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

அம்மையும் அத்தனும் அன்புற்ற தல்லது
அம்மையும் அத்தனும் ஆரறிவார் என்னை
அம்மையொ டத்தனும் யானும் உடனிருந்
தம்மையொ டத்தனை யான்புரிந் தேனே.

English Meaning:
Adore and Be With Siva-Sakti

My Mother and Father in love united;
Had they not,
Will my Mother and Father know me ever?
With my Mother and Father I sit,
And my Mother and Father,
I constant adore.
Tamil Meaning:
உலகத்தாயும், தந்தையுமாகிய சத்தியும், சிவனும் என்பால் அன்புவைத்து எனக்கு ஆவன செய்தலல்லது, என்னைப் பெற்ற தாய் தந்தையர்தாம் என்னை எந்த அளவில் அறிந்து எனக்கு என்ன செய்யவல்லுவர்! ஆகையால், உண்மைத் தாயாகிய சத்தியும், தந்தையாகிய சிவனும், மகனாகிய யானும் மட்டும் ஒன்றி யிருந்த காலத்து யான் அவ்விருவரையே விரும்பி அவரிடம் அயரா அன்பு உடையவனாயினேன்.
Special Remark:
`அதனால், அளவிலா ஆனந்தத்தையும் பெற்றேன்` என்பது குறிப்பெச்சம். இரண்டாம் அடிக்கு, `அம்மையும் அத்தனுந் தாம் என்னை யாராக அறிவர்?` என உரைக்க. `உயிர்களே தம்மில் ஒன்றற்கு ஒன்று யாதும் செய்து கொள்ளல் இயலாது` என்பது முதல் இரண்டடிகளில் விளக்கப்பட்டது. அதனானே, உயிர்கட்குப் பெத்தம், முத்தி ஆகிய எக்காலத்தும் சத்தியும், சிவனுமே பரம ஆதாரமாதல் விளக்கப்பட்டதாம். இம்மந்திரம் முத்தி பஞ்சாக்கரப் பொருளதாய் நிற்றலை நுனித்துணர்ந்து கொள்க.
இதனால், உயிர்கட்குப் பரம ஆதாரம் இது என்பது வலியுறுத்தப்பட்டது.