ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

தானந்தம் மேலே தருஞ்சிகை தன்னுடன்
ஆனந்த மோகினி யாம்பொற் றிருவோடு
மோனையில் வைத்து மொழிதரு கூறது
ஆனவை ஓம்எனும் அவ்வுயிர் மார்க்கமே.

English Meaning:
Meditate of Aum in Cranium Top

At the far end of Cranium top
She abides, Ananda Mohini, the Golden Lady;
Meditate on Her in Silence chanting Aum,
That way lies life`s Redemption.
Tamil Meaning:
ஆதி சத்தி, யோகியரது உச்சியிலும், அதற்கு மேலுள்ள பன்னிரண்டு அங்குலமாகிய நிராதாரத்திலும் குண்டலி சத்தியோடு அவட்கு முன்னவளாம்படி வைத்துச் சொல்லப்படும் வியட்டிப் பிரணவநிலைகளே பிரணவ யோக நெறியாகும்.
Special Remark:
``தான்`` என்றது மேலே போந்த ஆதி சத்தியை. அந்தம்- முடி; தலை. தலைக்குமேல் உள்ள நிராதாரத்தையே இங்கு, ``சிகை`` என்றார். `அந்தமும் அதன்மேலே தரும் சிகையும் ஆகிய இவற்றுடன் ஆனந்த மோகினியாம் திருவோடு மோனையில் ஆக வைத்து மொழிதரு கூறு` என்க. தரும் - சொல்லப்படுகின்ற. அசுத்த மாயையாகிய மோகினியினின்று பிரித்தற்குக் குண்டலினியை ``ஆனந்த மோகினி`` என்றார். பொன் திரு - பொன்போலச் சிறந்த சத்தி. `மோனை` எனினும், `முதல்` எனினும் ஒக்கும். `கூறு` என்பது தொகையால் ஒன்றாகலின், ``கூறது`` என்றார்; `அது`, பகுதிப்பொருள் விகுதி. உயிர் மார்க்கம் - உயிர்ப்பு நெறி; யோக நெறி. யோக நெறி களுள் குண்டலினியைப் பொதுவே செயற்படுத்தலும், அவளைப் பிராசாத முறையாற் காணுதலும் ஒன்றின் ஒன்று ஏற்றமாவன என மேலெல்லாம் கூறிவந்தவற்றோடு, பிராசாத கலைகளை ஆதி சத்திக்குப் பொருந்திய இடமாக வைத்துச் செய்யப்படுதல் மிகச் சிறந்ததாதல் இதனுட் கூறப்பட்டதாம்.
இதனால், சத்தியை அடைதற்கும் பிரணவகலைகளில் அவை யேயாய்க் கலந்து அவற்றைச் செயற்படுத்துபவள் சத்தி என்பதை உணர்ந்து செய்யும் சத்தி யோகமே மிக மேலானதாதல் கூறப்பட்டது.