ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

கருத்துறுங் காலம் கருது மனமும்
திருத்தி யிருந்தவை சேரும் நிலத்து
ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மேன்மேல்
இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆமே.

English Meaning:
Worship Sakti and Attain Siva`s Attributes

Think of Her;
Think of Her time and again;
Train your mind toward Her and reach Her;
Think of Her, deep in heart
Realize Her;
The Only One in this world;
She will make you bide here below for ever
You may attain eight attributes* of Siva too.
Tamil Meaning:
சத்தியிடத்து மனம் செல்லும் பொழுது அதனை நன் மனமாகச் செய்து, அதன்கண் உள்ள எண்ணங்களெல்லாம் குவிகின்ற இடமாகிய இருதயத்தில் ஒப்பற்றவளாகிய அவளையே முதல்வியாக உணர்ந்து தியானி. அங்ஙனம் தியானித்தால், அவள் உன்னை மேன் மேல் உயரச் செய்வாள். அதனால், நீ முடிவில் சிவனது எண்குணங் களையும் பெற்று விளங்கலாம்.
Special Remark:
மனம் திருந்தியபொழுது உண்டாகின்ற எண்ணம், `எல்லாம் சத்தியின் செயலே` என்பதும், `அவளையின்றி நமக்குச் சுதந்திரம் இல்லை` என்பதும், மற்றும் இவை போல்வனவுமாம். சிவனது எண்குணங்களாளாவன: `தன்வயம், தூய உடம்பு, இயற்கை யுணர்வு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசம் இன்மை, முடிவிலாற்றல், பேரருள், வரம்பில் இன்பம்` என்பன. ``எண்குணத்துளோம்`` 1 என்று நாவுக்கரசரும் அருளிச்செய்தமையால், திருவருள் பெற்றோர் இவ் எண் குணங்களையும் பெறுதல் அறியப்படும்.
இதனால், சத்தியது வழிபாடு உயிர்களை மேன்மேல் உயரச் செய்து, முடிவில் சிவமாகச் செய்தல் கூறப்பட்டது.