ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

பொற்கொடி மாதர் புனைகழல் ஏத்துவர்
அங்கொடி மாதுமை ஆர்வத் தலைமகள்
நற்கொடி மாதை நயனங்கள் மூன்றுடை
விற்கொடி மாதை விரும்பி விளங்கே.

English Meaning:
Goddess of Wealth Will Bow

She is Uma of dark slender form
She is Supreme mistress of Siva`s ardour
She is good vine that has eyes three
She is the Mother of arched brow;
Do adore Her
And be illumined,
The very Golden Goddess (of Wealth) shall
At your feet be.
Tamil Meaning:
மாணவனே, நீ, துவண்ட தோற்றத்தால் கொடி போலுதல் கொண்டு, நிறம் பற்றி, `பசுங்கொடி` என்றும், பயன் பற்றி, `நற்கொடி` என்றும், அழகு பற்றி `ஒளிக்கொடி` என்றும், புகழப் படுபவளும், மெய்யுணர்ந்தோரது அன்பிற்குத் தலைவியும், மூன்று கண்களை உடையவளும் ஆகிய பராசத்திக்கு அன்பு செய்து மேம்படு; அழகிய கொடிபோல்பவராகிய கலைமகளும், திருமகளும் உன் பாதங்களைப் போற்றுவார்.
Special Remark:
முதலடியை ஈற்றிற் கூட்டி உரைக்க. `பொற்கொடி மாதர்` என்பது பின்னர்க் கூறப்பட்ட மாதோடு உடன் எண்ணப்படு வாரைக் குறித்தது. இவ்வாறன்றி இயைபில்லாத மக்கட் பெண்டினர் எண்ணுதல் கூடாமையானும்` அங்ஙனங் கொண்டுரைப்பின் வாம நெறியாமாகலானும் அது பொருந்தாமை யறிக. `பராசத்தியை வழிபடினும் கல்வியின் பொருட்டும், செல்வத்தின் பொருட்டும் கலைமகளையும், திருமகளையும் வழிபடுதல் இன்றியமையாது போலும்` என ஐயுற்றமாணாக்கனை, `பேரன்புடைப் பெருமக்கட்குப் பராசத்தியே அனைத்தையும் தருவாள்` எனத் தெளிவித்தவாறு.
இதனால், சிவசத்தி வழிபாடு ஒன்றே அனைத்துப் பயன்களையும் தருதல் கூறப்பட்டது.