ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

ஆலம்உண் டான்அமு தாங்கவர் தம்பதம்
சாலவந் தெய்தும் தவத்தின்பந் தான்வரும்
கோலிவந் தெய்தும் குவிந்த பதவையே
டேலவந் தீண்டி யிருந்தனள் மேலே.

English Meaning:
Sakti With Siva in Sahasrara

He consumed poison
While He let Celestials consume ambrosia;
Their immortal state shall reach you;
The Joys of tapas shall yours be,
Piercing Chakras
She entered unopened flower above,
With Lord, She there sat,
High in Sahasrara.
Tamil Meaning:
சத்தி, எல்லா உலகங்களையும் கடந்து சென்று எய்தப்படுவதாகிய சிவலோகத்திற்குத் தலைவனாகிய சிவனுடனே மிக அணிமையில் வந்து யோகியர்தம் உச்சியிலே இருக்கின்றாள். அவளை அடைதலாலே, சிவன் நஞ்சை உண்டதனால் அமுதத்தை உண்ணப் பெற்ற அந்தத் தேவர்கள் பதவிகள் மிகக் கிடைக்கும்; அதுவேயன்றிச் சரியை முதலிய தவங்களால் வருகின்ற சிவலோகத்து இன்பமும் கிடைக்கும்.
Special Remark:
`ஆலம் உண்டானால் ஆங்கு அமுதுண்ட அவர்` என உருபும், ஒருசொல்லும் விரித்துக் கொள்க. கோலுதல் - விலக்குதல். ``கோலி வந்து`` என்பதில் ``வந்து`` என்பது இட வழுவமைதி, ``குவிந்த`` என்றது, `முடிந்த` என்றவாறு. ஐ - தலைவன். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, ஈற்றடியின் பின் `அவளால்` என்பது வருவித்துக் கொண்டு உரைக்க.
இதனால், சத்தியது அருளால் எல்லா இன்பமும் எய்தப் படுதல் கூறப்பட்டது.