ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

பராசத்தி என்றென்று பல்வகை யாலும்
தராசத்தி யான தலைப்பிர மாணி
இராசத்தி யாமள ஆகமத் தாள்ஆங்
குராசத்தி கோலம் பலஉணர்ந் தேனே.

English Meaning:
She is Multiformed, Praised in Vyamala Agama

Parasakti is Power that supports all
And everywhere;
She resides within head;
She is Sakti of the Night;*
She is in Vyamala Agama praised
She is Sakti that comes as Guru
Diverse indeed Her Forms, I perceived.
Tamil Meaning:
`பராசத்தி` என்றே பல வகையிலும் பன்முறை துதிக்கப்பட்டு எல்லாவற்றிற்கும் ஆதார சத்தியாய் நிற்கின்ற, வேதத் தின் வழி அறியப்படுகின்ற அவளே முழுமுதற் சத்தியாம். அவளை யாமள ஆகமம் பலபடக் கூற, அவ்வாறும் பல்கி நின்ற அவளது பல கோலங்களையும் யான் அவளது அருளாலே அறிந்தேன்.
Special Remark:
``என்று`` என்பது, `எனப்பட்டு` எனப் பொருள் தந்தது. `பல்வகையானும் பராசத்தி என்றென்று` என மாற்றி உரைக்க. அடுக்கு, பன்மை குறித்தது. தலைப்பிரமாணம் - தலையாய நூல். அது வாயிலாக அறியப்படுபவளை, ``தலைப்பிரமாணி`` என்றார். `இரா சாத்தி` என்பது குறுகிநின்றது. இராணியை `இராசாத்தி` என்றல் நாட்டு வழக்கு. யாமள ஆகமம் வாம மார்க்கத்ததாய்ச் சத்தியின் வடி வங்களைப் பலப்படக் கூறி, அவற்றிற்குரிய வழிபாடுகளையும் பலபட விதிக்கும். அந்நிலையில் நிற்பாரையும் உய்வித்தல் சத்திக்குக் கடப்பாடாதலின், அவ்வாறு நின்று அவர்கட்கும் அருள்புரிதல் பற்றி, ஆங்கு ``உரா சத்திகோலம் பல உணர்ந்தேன்`` என்றார். உராவுதல் பரந்து தோன்றல். `உராவு` என்பது குறைந்து நின்றது, `உராவு கோலம்` என இயையும். முருகனும் இவ்வாறு தாழ் நிலையில் நின்று செய்வாரது வழிபாட்டினையும் ஏற்று, அவர்க்கு ஏற்றவாறு அருள் புரிதலைத் திரு முருகாற்றுப்படை ``சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து`` என்பது முதலாகப் பல அடிகளால் உணர்த்துதல் காண்க. `ஆகமத் தாளாக` என ஆக்கம் விரிக்க.
இதனால், சத்தி தன்னை அறிவார் அறிந்த வாற்றான் வழி படும் இடங்களில் எல்லாம் ஆதார ஆதேயங்களாய் நின்று அவர வர்க்குத் தக அருள் செய்தல் கூறப்பட்டது.