ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

ஆமைஒன் றேறி அகம்படி யான்என
ஓமஎன் றோதிஎம் உள்ளொளி யாய்நிற்கும்
தாம நறுங்குழல் தையலைக் கண்டபின்
சோம நறுமலர் சூடிநின் றாளே.

English Meaning:
In Loving Constancy Reach Sakti

Like a turtle, withdraw you senses;
Like a vassal devoted, be in loving constancy;
Chant ``Aum``
And meet Her, of shining fragrant tresses
In your heart`s Centre She as Light stands,
There She stood, bedecked with Flower,
That is Crescent Moon.
Tamil Meaning:
யான் ஆமையைப்போல ஐம்புல ஆசைகளைத் திருவருளுக்குள்ளே அடக்கி, மெல்லென மேலேறிச் சென்று, புறத்தே செல்லாது அகத்தே நிற்பவனாகி, ஓங்காரத்தை உச்சரித்து, எம்போல் வார்க்கு உள்ளொளியாய் விளங்குகின்ற யோக சத்தியைத் தரிசித்த பின்பு, அவள் சந்திரமண்டலத்தில் உள்ள நறுமணம் பொருந்திய தாமரை மலரைச் சூடி வெளிநின்றாள்.
Special Remark:
ஐம்புல ஆசையை அடக்குவோர்க்கு ஐந்துறுப்புக் களையும் ஓட்டிற்குள் அடக்கிக்கொள்ளும் ஆமை உவமையாதல்,
``ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து`` (குறள் - 126)
எனவும்,
``புலன் அடக்கித் தம்முதற்கண் புக்குறுவார்; போதார்
தலன்நடக்கும் ஆமை தக`` 1
எனவும் போந்தவற்றால் நன்கறியப்பட்டது. `ஒன்ற` என்னும் உவம உருபின் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று. அகம்படி - அகத்தேபடிந்து நிற்பவன். `என` - என்று ஆகி. `ஓம்` என்பது அகரச் சாரியை பெற்று வந்தது. சந்திரமண்டலம், சென்னி. அங்குள்ளது ஆயிர இதழ்த் தாமரை மலர். அதனைச் சூடிநிற்றல். ஆஞ்ஞை முதலாக வெளிப்பட்டு நிற்றல்.
இதனால், ஐம்புலன்களை அடக்கிப் பிரணவ யோகம் செய்தால் யோக சத்தியைத் தரிசித்தல் கூடும் என்பது கூறப்பட்டது.