ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

ஈறது தான்முதல் எண்ணிரண் டாயிரம்
மாறுதல் இன்றி மனோவச மாஎழில்
தூறது செய்யும் சுகந்தச் சுழியது
பேறது செய்து பிறந்திருந் தாளே.

English Meaning:
She Abides in Moon`s Sphere, Changeless

That is beginning and end of where She is
—The Kalas twice-eight in the Moon Sphere—
Changes indefinite it none has;
It is of infinite beauty
Reached by Centred Mind,
It is a Centre that is fragrant dense
There was She born,
And there in divinity abides.
Tamil Meaning:
மேல், ``இந்துவின் மேல் உற்ற ஈறு`` எனப்பட்ட அந்த நாதமே சொல்லுலகங்கள் எல்லாவற்றிற்கும் (வேதம், வேதாங்கம், ஆகமம், புராணம், இதிகாசம், மிருதி முதலிய எல்லா நூல் கட்கும், பலவாய் வழங்கும் மொழிகட்கும்) முதல். சில சுழிக் கூட்டத்தால் பூங்கொத்துப் போல்வதாய வடிவினையுடைய அது நிராதார யோகத்தில் பிராசாத கலைபதினாறில் முடிவாயுள்ள உன்மனா கலையிலும், ஆதாரயோகத்தில் ஆயிர இதழ்த் தாமரை யிலும் மனம் யாதோர் அசைவுமின்றி நின்று வசமாகும்படி உயிரினது ஆற்றலை மிகக் குவிப்பதாகும். அதனால், அதனைக் காணுதலையே சத்தி தன் அடியவர்க்குப் பெரும்பேறாக அளித்துத் தானும் அவ்விடத்தே அவர்கட்குக் காட்சியளித்து நிற்பாள்.
Special Remark:
ஈறு அதுதான் - `ஈறு` எனப்பட்ட அதுவே. `எண்ணிரண் டிலும், ஆயிரத்திலும் மனம் மாறுதல் இன்றி வசமாக` எனக் கூட்டுக. எண்ணுப் பெயர்கள் முறையே அவ் எண்ணு முறைக்கண் நிற்கும் கலையையும், அத்துணை இதழ்களையுடைய மலரையும் குறித்தன. இவைகளில் ஏழன் உருபுகள் தொக்கு நின்றன. ஆக - ஆகும்படி. இதன் ஈறு குறைந்து நின்றது. `எழில் - எழுச்சி; ஆற்றல். தூறு - குவியல். இதன் பின் நின்ற `அது`, பகுதிப் பொருள் விகுதி. சுகந்தம், முன்னர்ப் பூவையும், பின்னர் அதன் கொத்தினையும் குறித்த இருமடி ஆகுபெயர். `சுகந்தம் போலும் சுழியாகிய அது` என்க. `சுகந்தச் சுழி யாகிய அது, எண்ணிரண்டிலும் ஆயிரத்திலும் மனம் மாறுதல் இன்றி வசமாக, எழிலைத் தூறு செய்யும்` எனவும், `அதுபேறு செய்து பிறந் திருந்தாள்` எனவும் கூட்டி முடிக்க. பூங்கொத்துப் போலும் வடிவுடை யது விந்து வின் பகுதியாகிய நிரோதினி கலையே யாயினும், அவ் விடத்துச் சத்தி உருவப் பொருளாய் விளங்குதல் கூறுவார், விந்துவின் நுண்ணிலையாகிய அதனையே `நாதம்` என உபசரித்துக் கூறினார்.
இதனால், சத்தி விந்துத் தானத்தில் உருவப் பொருளாய்க் காட்சியளித்துப் பின் அடியவரை ஆதாரயோக முடிவிலும், நிராதார யோக முடிவிலும் மனோலயம் பெற்றவராக ஆக்குதல் கூறப்பட்டது.