ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை
மாச்சற்ற சோதி மனோன்மனி மங்கையாம்
காச்சற்ற சோதி கடவு ளுடன்புணர்ந்
தாச்சற்றெ னுட்புகுந் தாலிக்குந் தானே.

English Meaning:
As Siva-Sakti She is in My Heart

She is the great Truth of silence
She is graciousness high manifest
She if Pure Light
She is Manonmani Sakti;
The Blemishless Light espousing God
Entered in me and delighted me.
Tamil Meaning:
சொல்லற்ற இடத்தில் நிற்கும் தலைவனாகிய சிவன் குற்றம் அற்ற ஒளிப்பொருள். துணைவியாகிய சத்தியும் அங்ஙனம் குற்றம் அற்ற ஒளிப்பொருளே. ஆயினும் சத்தியே சிவத்துடன் வந்து குற்றம் அற்ற என்உள்ளத்தில் புகுந்து ஆரவாரிக்கின்றாள்.
Special Remark:
அஃதாவது, `சிவமும் சத்தியும் ஒரு பொருளே யாயினும், அப்பொருள் உயிர்களோடு தொடர்புகொள்ளும் நிலையில் `சத்தி` எனப்படுகின்றது` என்பதாம். பெருந்தகை - தலைவன். காண், உம் அசைகள். `குற்றம்` என்னும் பொருளைத் தருகின்ற, `மாசு, காசு, ஆசு` என்பன எதுகை நோக்கி விரிதல் பெற்றன. இறுதியடியில், `அற்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. மங்கையாம் மனோன்மனி என மாறுக. இங்கு உம்மை தொகுக்கப்பட்டது `மங்கையும்` என்றே ஓதுதலுமாம். `அவள் புணர்ந்து புகுந்து ஆலிக்கும்` என வேறு தொடராக்கி முடிக்க. ``கடவுளுடன் புணர்ந்து`` என்றது. தனித்து நில்லாமையை வலியுறுத்தியதாம்.
இதனால், `முதற்பொருள் இரண்டில்லையாயினும், செய லிடத்துச் சத்தியாய் நிற்கும்` என்பதுணர்த்தி, மேல், `சத்தியே ஆதார ஆதேயமாய் நிற்கின்றாள்` எனக் கூறியதன்கண் ஐயம் அறுக்கப் பட்டது.