ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

சத்தியும் நானும் சயம்புவும் அல்லது
முத்தியை யாரும் முதல்அறிவா ரில்லை
அத்திமேல் வித்திடின் அத்தி பழுத்தக்கால்
மத்தியில் ஏற வழியது வாமே.

English Meaning:
Source — Knowledge of Mukti

None except Sakti, Siva and (I) Jiva know
The Source of Mukti;
When you meditate constant on Sakti
That as Aum ripens,
That the Way sure
To enter the Centre aloft Sahasrara.
Tamil Meaning:
`சத்தியும், யானும், சிவமும்` என்னும் மூவர் தவிர, வீடுபேற்றினை அதன் முதல் பற்றி அறிபவர் ஒருவரும் இல்லை. முதுகந் தண்டாகிய எலும்பின்கண் பிராண வாயுவைக் கும்பித்தால், அவ் எலும்பு பக்குவப்பட்டு, அந்தப் பிராணவாயு சுழுமுனையூடே மேல் ஏறிச் செல்லுதற்கு ஏற்றதாகும்.
Special Remark:
`இதுவே முத்தி முதல்` என்பது குறிப்பெச்சம். `திருவருள் பெற்றோர்க்கு இது விளங்கும்` என்பார், அப்பேறு பெற்ற தமது பெருமை தோன்ற, ``யானும்`` என்றார்.
``முதல்முன் ஐவரின் கண்ணென் வேற்றுமை
சினைமுன் வருதல் தெள்ளி தென்ப`` 1
என்பதனால், `முதற்கண் அறிவாரில்லை` என ஏழாவது விரிக்க. முதல் - வேர். வியப்புச் சுவை நயம் பற்றி, ``அத்திமேல் வித்திடில் அத்தி பழுத்தக்கால்`` என ஓதினாராதலின், ``அத்தி`` என்பதற்கு, `எலும்பு` என்பதும், ``மேல்`` என்பதற்கு, `கண்` என்பதும், `பழுத்து அக்கால்` என்பதும் பொருளாதல் விளங்கும். வித்திடுதல் நிலத்திலாதலின், ``அத்திமேல்`` என்றது, `அத்தியது அடிக்கண்` என்றதாம். ``அக்கால்`` எனப்பின்னர் சுட்டிக்கூறலின், வித்து என்றது அக்காலினை (பிராணவாயுவை) யாயிற்று. யோகத்திற்கு முதலாவது பிராணன் ஆதலின், அதனை `வித்து` என்றார். ``மத்தி`` என்பது ஆகுபெயராய் நடுநாடியாகிய சுழுமுனையைக் குறித்தது.
இதனால், முன்னர்ச் சத்தியை அடைந்து, பின் அவள் வழியாகச் சிவத்தை அடைவதாகிய முத்திக்கு வழி யோகம் என்பது கூறப்பட்டது. முத்திக்கு முடிநிலை வழியாகிய ஞானம் சத்தியேயாதல் அறிக.