ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து
முந்தையில் வைத்துத்தம் மூலத்தி லேவைத்து
நிந்தையில் வையா நினைவதி லேவைத்துச்
சந்தையில் வைத்துச் சமாதிசெய் வீரே.

English Meaning:
Way to Enter Samadhi

Hold Her in your thoughts,
Hold Her on your head,
Hold Her in your presence
Hold Her in Muladhara
Hold Her in meditation
Undistracted by worldly thoughts,
Hold Her in the mystic junction in cranium,
And into Samadhi enter.
Tamil Meaning:
தேவியை முதலில் உங்கள் உடம்பில் சிரம் முதலிய இடங்களிலே வைத்தும், பின்பு இருதயம் முதலிய உறுப்புக்களிலே வைத்தும், அதன்பின் உங்கள்முன் உள்ள திருவுருவத்தில் வைத்தும், அதன்பின் மூலம் முதலிய ஆதாரங்களில் வைத்தும் வழிபட்டு அவளோடு ஒன்றாகி நில்லுங்கள். அங்ஙனம் வழிபடும் பொழுது பிற வற்றை நினைத்தலாகிய குற்றத்தில் அகப்படுத்தப்படாத மனத்தை அவ் விடங்களிலே பிறழாது நிறுத்துதலையும், அவ்வவற்றிற்கு ஏற்ற மந்திரங்களில் அவளை எண்ணுதலையும் இன்றியமையாததாகக் கொள்ளுங்கள்.
Special Remark:
`மந்திரம், கிரியை, பாவனை` என்னும் வழிபாட்டுப் பகுதி மூன்றனுள், ``சந்தையில் வைத்து`` என்பதனால் மந்திரமும், ``நினைவு வைத்து`` என்பதனால் பாவனையும், ஏனையவற்றால் கிரியையும் கூறப்பட்டன. சிராதிகளாவன, `தலை, முகம், மார்பு, குய்யம், பாதம், முதலாக எஞ்சியவை` என்னும் ஐந்துமாம். இவ்விடங்களில் அம்மையின் தலை முதலியன முறையே பஞ்சப் பிரம மந்திரங்களால் வைத்து எண்ணப்படும். இருதயம் முதலியவை யாவன, `இருதயம், சிரசு, கூந்தல், கவசம், நேத்திரம், அஸ்திரம்` என்னும் ஆறுமாம். இவற்றில் அம்மையின் அங்கங்கள் அவ்வம் மந்திரங்களால் முறைப்படி வைத்து எண்ணப்படும். முந்தை - முன்னுள்ள இடம்; இஃது ஆகுபெயராய் அங்கு உள்ள திருவுரு வத்தைக் குறித்தது. திருவுருவத்தில் மேற்கூறிய இருவகை மந்திரங் களால் மேற்கூறிய இருவகையாகவும், வேறு பல மந்திரங்களால் விரிவாகவும் வைத்து அம்மை வழிபடப்படுவாள். `இருதயம், மூலம்` என்பன உபலக்கணமாய் நின்றன. மூலம் முதலிய ஆதாரங்களில் வைத்து வழிபடுதலே யோகம் என்பது வெளிப்படை. யோகத்திலும் கிரியை உளதாதலை நினைக்க. சந்தை - ஓசை; அஃது அதனையுடைய மந்திரத்தை உணர்த்திற்று. இங்ஙனம் செய்யும் வழிபாடுகளால் தேவியது காட்சியை நாளடைவில் பெறுதல் கூடும் என்பதாம்.
இதனால், சத்தி தன் அடியார்களது உடம்பும், அவர்கள் முன் நிற்கும் படிவங்களும் ஆகிய ஆதாரங்களில் நின்று அருள் புரிதல் கூறப்பட்டது.