ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்

பதிகங்கள்

Photo

ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள்
ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள்
நாமம் நமசிவ யவ்வென் றிருப்பார்க்கு
நேமத் துணைவி நிலாவிநின் றாளே.

English Meaning:
Chant Na Ma Si Va

The Beauteous One is She,
The Divine Swan (So-Ham) is She;
There She was in Mantra Aum too;
With those who chant,
Syallable Na-Ma-Si-Va
She, the Mother of Niyama,
Constant stood to succour.
Tamil Meaning:
அடப்படாத உணவுப் பொருளாயிருந்து பின் அடப்பட்ட உணவாகவும் ஆகின்ற சத்தி, வயிற்றுத் தீயும், குண்டத் தீயு மாகிய ஓமத் தீக்களிலும் ஒப்பற்ற ஒருத்தியாய் இருந்து அவற்றை அடையும் பொருள்களைச் செரிப்பித்தும், அவியாக்கியும் உதவு கின்றாள். அவளது பெயராகிய திருவைந்தெழுத்தையே துணையாகப் பற்றி அமைதியுற்று இருப்பவர்கட்கு, தவத்தின் முதல்வியாகிய அவள் இனிது விளங்கி அருள்புரிவாள்.
Special Remark:
``இருந்து`` என்னும் எச்சம் ``அன்ன மயத்தினள்`` என்பதில் தொக்குநின்ற `ஆவாள்` என்பதனோடு முடிந்தது. உணவு கொள்ளுங்கால் வயிற்றுத்தீயும் ஓமாக்கினியாகக் கருதப்படுதலை நினைக. வயிற்றுத் தீயில் நின்று மண்ணுலகத்தவர்க்கும், வேள்வித் தீயில் நின்று விண்ணுலகத்தவர்கட்கும் உதவுதலைக் குறித்தவாறு. இவ்வாறு யாவர்க்கும் உதவுபவளாகிய அவளை அஞ்செழுத்து வழியாக அடைந்து பயன்பெற வேண்டும் என்பதாம். `நமசிவ` எனப் பாடம் ஓதின் யாப்புக் கெடுதலை நோக்குக. சத்தி சிவங்கட்கு இடையே வேற்றுமையின்மையின், சிவனது நாமத்தைச் சத்தியது நாமமாகவே அருளிச் செய்தார். `நமச்சிவாயை என்று` எனப் பாடம் ஓதலுமாம். நியமம், ``நேமம்`` என மருவிற்று.
இதனால், சத்தி உயிர்களைச் சில ஆதாரங்களில் நின்று காக்குமாறு கூறப்பட்டது.