ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்

பதிகங்கள்

Photo

ஒத்த சமயங்கள் ஓராறு வைத்திடும்
அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திலர்
அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திடின்
முத்தி விளைக்கும் முதல்வனு மாமே.

English Meaning:
Tamil Meaning:
`புறப்புறம், புறம் அகப்புறம், அகம்` எனப் பாகுபட்ட சமயங்கள் பலவற்றுள் பெரும்பான்மை ஒத்த கொள்கை யுடையவாய்ச் சிறுபான்மையே வேறுபட்ட சமயங்கள் அகச் சமயங்களாகும். அவையாவும் சைவமே. அவை ஆறு வகைப்பட்டன. அந்த ஆறும், `தம்மை ஆக்கினவன் சிவனே` எனக் கருதுகின்றன. அதனைப் பிற சமயிகள் மறுக்கின்றனர். அம்மறுப்புக்களைக் கேளாமல், `அகச் சமயங்கள் ஆறும் சிவனையே முதல்வனாக உடையன` என்பதை ஒருவன் அறிந்து, அவற்றுள் எந்த ஒன்றனையேனும் தெளிந்து அதில் நிற்பானாயின், அவன் சிவஞானியாய்த் தானும் முத்திக்கு உரியவனாய்ப் பிறரையும் முத்திக்கு உரியவராகச் செய்ய வல்ல ஆசிரியனும் ஆவான்.
Special Remark:
`சமயங்கள்` என்னாது, ஒத்த சமயங்கள் என்றதனால், அவை அகச் சமயங்களாயின. எனவே, அவை தம்முள் ஒத்தனவாதல் பற்றியே ``ஒன்றதே பேரூர்; வழி ஆறதற்குள்`` எனவும், அவற்றுள் ஒன்றை இகழ்வோரையும், ``குன்று குரைத்தெழு நாயைஒத் தாரே`` எனவும் முன்பு4 கூறினார். அவ்வகச் சமயங்கள் `பாடாண வாத சைவம்` முதலிய ஆறுமாம். அவற்றைச் சங்கற்ப நிராகரண நூலுட்காண்க. அந்நூலுள் இறுதியில் அடைமொழியின்றி, `சைவம்` என்றே கூறப்பட்டது சுத்த சைவம். அதற்கும், சித்தாந்த சைவத்திற்கும் இடையேயுள்ள வேற்றுமை மிகமிகச் சிறிதே. `குரு` என்பது பொது வாயினும், சைவத்துள் `சிவாச்சாரியார்` `சைவாச்சாரியர்` என்றும் குறிக்கப்படுவோரே `சிவகுரு` எனப்படுவர். சிறுசிறு வேறுபாட்டால் அவருள் தாரதம்மியமும், சித்தாந்த சைவாசாரியரை நோக்க ஆசிரியத்தன்மை முற்றப்பெறாமையும் உடையரேனும், அவரெல்லாம் சிவப்பேறாகிய முத்தியை வழிமுறையில் அடைவிப்பவரேயாவர் அதனால், `சிவப் பேற்றை விரும்புவர் அவருள் எவரையேனும் ஆசிரியராகத் தெளியின் பழுதடையார்` என்பதாம்.
இதனால், `சித்தாந்த சைவமும் பொதுவாக, `சமயம்` என வழங்கப்படினும், அது சமயங் கடந்த நெறியேயாம்` என்பதை அதற்கு அணியவாகிய அகச் சமயங்களது சிறப்புக் கூறும் முக்ததால் சமயங்களைப் பற்றிய கூற்றுக்களில் இறுதியாக முடித்துக் கூறினார்.