ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்

பதிகங்கள்

Photo

நாமமொ ராயிரம் ஓதுமின் நாதனை
ஏமமொ ராயிரத் துள்ளே யிசைவீர்கள்
ஓமமொ ராயிரம் ஓதவல் லாரவர்
காமமோ ராயிரங் கண்டொழிந் தாரே.

English Meaning:
Chant ``Aum`` Incessantly

Chant, the Lord`s name, a thousand times,
A thousand blessings shall yours be;
They who chant the lovely ``Aum`` a thousand times,
Are rid of a thousand thousand passions, away.
Tamil Meaning:
`அளவற்ற மந்திரங்களை ஓத வல்லேம்` என்று சொல்லி, வேத வேள்விகளை அளவின்றிச் செய்தோர் யாவரும் அவற்றின் பயனாகிய போகங்களை அனுபவித்தலோடு போய் விட்டார்கள். ஆகவே, சிவனை அவனது அளவற்ற திருப்பெயர்களைச் சொல்லித் தோத்திரியுங்கள்; அளவற்ற இன்பத்தில் பொருந்துவீர்கள்.
Special Remark:
`ஓமம் செய்தவர்கள் பெற்றது காமம்` எனவே, `நாமம் ஓதுவார் பெறுவது மோட்சம்` என்பது பெறப்பட்டது. ``காமம், ஏமம்`` எனவும், `ஒழிந்தார், இசைவீர்` எனவும் கூறிய சொற்குறிப்புக்களால், ஓமத்தை விலக்குதற்கண்ணதே நாயனாரது கருத்தாதல் விளங்கும். ``பசித்துண்டு பின்னும் பசிப்பானையொக்கும் - இசைத்து வருவினையில் இன்பம்``2 என மெய்கண்ட தேவரும் அதனை விலக்குதலையே மேற்கொண்டார்.
``அவிசொரிந் தாயிரம் வேட்டலின், ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று``2
என்னும் திருக்குறளும் இக்குறிப்புடைத்து. ``ஆயிரம்`` என்றவை அளவின்மை குறித்து நின்றன.
இதனால், வேள்வி மந்திரங்களை ஓதுதலைவிட, வழி பாட்டுத் தோத்திரம் பயனுடைத்தாதல் கூறப்பட்டது.
[இதன் பதிப்புக்களில் காணப்படும், ``போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகழ் ஞானத்தை`` என்னும் மந்திரம் நான்காம் தந்திரத்தின் தொடக்கமாய் வந்தது.]1