ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்

பதிகங்கள்

Photo

மேலது வானவர் கீழது மாதவர்
தானிடர் மானுடர் கீழது மாதனம்
கானது கூவிள மாலை கமழ்சடை
ஆனது செய்யும் எம் ஆருயிர் தானே.

English Meaning:
How Lord is Seated

The Celestials stand above,
Below them are Tapasvins great;
Below them are humans, by sorrow harassed;
Thus is He seated;
And the bilva garland fresh from forest,
Festoons the fragrant matted locks,
He does for Jiva what is appropriate.
Tamil Meaning:
மேலே உள்ள வானத்தில் வாழ்பவரும் கீழே உள்ள நிலத்தில் வாழும் பெருந்தவத்தோரும் தவம் இன்மையால் துன்புறுகின்ற உலகரும் ஆகிய அனைவர்க்கும் வெளித்தோன்றாது புதைந்துள்ளது ஒரு பெருநிதி. அது வில்வமாலை மணக்கும் சடையை உடையது. எங்கட்கு ஆவனவற்றையெல்லாம் அது தானாகவே செய்யும். அதுவே எங்கட்கு அரிய உயிர்.
Special Remark:
``மேலது`` என்பது ``வான்`` என்பதனோடே முடிந்தது. முதற்கண் நின்ற ``கீழது`` என்பது கீழ் உள்ளதாகிய நிலத்தைக் குறித்தது. கீழ்தன்கண் உள்ள மாதவர், மானுடர்` என்க. தான், அசை, `வானவர், மாதவர், மானுடர்` என்னும் செவ்வெண்ணிற்குரிய தொகைப் பொருட்டாகிய `யாவரும்` என்பதனோடு, `யாவர்க்கும் என உருபும் விரிக்க. பின் வந்த ``கீழது`` என்பது `மறைந்துள்ளது` என்னும் பொருட்டு. கான் - மணம். இதன்பின் வந்த `அது` என்பது பகுதிப்பொருள் விகுதி. கூவிள மாலை கான கமழ் சடை` என மாற்றியுரைக்க. `சடைத்து என்னும் துவ்விகுதி தொகுக்கப்பட்டது. இவ்வாறன்றி, `சடையொடு` என உருபு விரித்து, அவனை, ``செய்யும்`` என்பதனோடு முடிப்பினும் ஆம். மூன்றாம் அடிக்கு, முன் மந்திரத்தில் இரண்டாம் அடிக்கு உரைத்தது. ``ஆனது தானே`` செய்யும்` என இயைக்க. முதலடி `எதுகை யின்றி, முரண் தொடை நயமே பெற்று வந்தது.
இதனால், சிவன் தன் அடியார்க்கே ``எய்ப்பினில் வைப்பாய்``1 அவர்க்கு ஆவனவற்றைத் தானே செய்து, அவர்கட்கு உயிர்போலச் சிறந்து சிறப்புப் புகழ்ந்து கூறப்பட்டது.