ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்

பதிகங்கள்

Photo

வள்ளல் தலைவனை வானநன் னாடனை
வெள்ளப் புனற்சடை வேத முதல்வனைக்
கள்ளப் பெருமக்கள் காண்பர் கொலோ என்றென்(று)
உள்ளத்தி னுள்ளே ஒளித்திருந் தாளுமே.

English Meaning:
He Hides in the Heart

The Bounteous Lord,
The Monarch of Heavenly Kingdom
The Lord of matted locks,
That carried Ganga waters flowing,
The Primal One of Vedas,
Lest them devoid of faith should see Him,
He hides in the heart within,
In the heart within.
Tamil Meaning:
[தலைவனை, நாடனை, முதல்வனை என வந்த வற்றிற்கு, `இத்தன்மையேனாகிய என்னை` என்பதே கருத்தாகலான், இவை தன்மைக்கண் படர்க்கை வந்த இட வழுவமைதி.]
`ஒப்புயர்வற்ற தலைமையையும், சிற்பர வியோமத்தில் இருக்கும் இருப்பையும், வேதத்தைச் செய்த முதலாசிரியத் தன்மையும் உடையேனாகின்ற என்னை, எனது உண்மையை உணராது, தாங்களையே தலைவர்களாகக் கருதிக் கொண்டு செயற்படுகின்ற மாக்கள் என்று உணர்வார்களோ` என்னும் அருள் நோக்குடன் சிவபெருமான் உயிர்களின் உள்ளத்துள்ளே தோன்றாத் துணையாய் இழிந்து, காலம் வந்தபொழுது தோன்றி ஆட்கொள்கின்றான்.
Special Remark:
கள்ளம் உடையரை, ``பெருமக்கள்`` என்றது வஞ்சப் புகழ்ச்சி. ``உடம்போ டுயிரிடை நட்பு``1 என்றது போல. கொல், அசை ``வள்ளல் தலைவன்`` என்பது முதலிய குறிப்பினால், ``ஒளிந்திருந் தானாம்`` என்னும் பயனிலைக்கு. `அவன்` என்பது தோன்றா எழு வாயாய் நின்றது. என்று இரண்டில் முன்னதை, என்று காண்பர் கொலோ` என மாற்றிவைத்துரைக்க. ஓர் என்றே பாடமாக ஓதுதல் பாடமன்று.
இதனால், சிவன் காலம் வாராத முன்னெல்லாம் தோன்றாத் துணையாயும், காலம் வந்தபொழுது தோன்றி ஆறாம் துணைவனாயும் நிற்கும் கருணைத்திறம் புகழ்ந்து கூறப்பட்டது.