ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்

பதிகங்கள்

Photo

ஆறு சமயம் முதலாம் சமயங்கள்
ஊற தெனவும் உணர்க உணர்பவர்
வேற தறஉணர் வார்மெய்க் குருநந்தி
ஆற தமைபவர்க் கண்ணிக்குந் தானே.

English Meaning:
Tamil Meaning:
சமயங்களுட் சிறந்தனவாகச் சொல்லப்படுகின்ற ஆறு சமயம் முதலாக அனைத்துச் சமயங்களிலும் ஒரோ ஒன்றே `நன்று` என உணர்பவர் உணரட்டும் (அஃது அவர் விருப்பம்) சமய வேற்றுமை பாராட்டாது, `அனைத்துச் சமயங்களையும் அதனதனளவில் நன்றே` என உணர்பவர்க்கு உண்மைக் குரு நந்தி பெருமானேயாவார். அவரது மரபு நெறியே சான்றோர்க்கு இனிதாய் இனிக்கும்.
Special Remark:
அதனதன் அளவில் நன்றாதலாவது, ஓரோர் பக்குவம் உடையார்க்கு அவர்க்கேற்ற நன்மையைத் தருவதாதல் ``எச்சமயத் தோர்செல்லும் - தீதொழிய நன்மை செயல்``1 1நல்வழி. என ஔவையார் கூறியதும், எல்லாச் சமயங்களும் ஓரோர் நன்மை கருதியே எழுந்தனவாதல் பற்றியே. அங்ஙனமாயின் பிற மதங்களை நூல்கள் மறுத்தல் ஏன் எனின், மறுப்பு, அதில் உள்ள நன்மையைப் பற்றி எழுதல் இல்லை; அவ்வச்சமயத்திற்கு மேம்பட்ட சமயத்தில் உள்ள நன்மையை மறுப்பதைப் பற்றித்தான் எழும் என்க.
உறுவது - நன்றாவது, ``உணர்வார் குரு`` என்னும் கிழமை்ப பொருள் தொகையில், `குரு` உயர்திணையாகலின் `உணர்வாரது குரு` என ஆறாவது விரியாது, `உணர்வார்க்குக் குரு` என நான்காவது விரிக்க. `அவரது ஆறு` எனச்சுட்டு வருவிக்க. `அது` இரண்டும் பகுதிப் பொருள் விகுதிகள். அமைபவர் - சான்றோர். சான்றோர் முழு துணர்ந்தவர். எனவே, `உணர்வார் உணர்க என்றது ஒருபுடை உணர்ந்தாரை நோக்கியாம்.
சமயங்களுட் சிறந்த சமயங்களாகச் சொல்லப்படும் ஆறாவன ஆறு தரிசன மதங்கள். அவை `வைசேடிகம், நையாயிகம், பூர்வ மீமாஞ்சை, உத்தர மீமாஞ்சை, சாங்கியம், யோகம்` என்பன. இவை வேதத்தின் தத்துவத்தை ஆராயும் நூல்களாகச் சொல்லப்படுதலின் சிறந்தனவாகச் சொல்லப்படுகின்றன. ``அறிவினால் மிக்க அறுவகைச் சமயத்து``1 எனச் சுந்தரர் அருளிச் செய்ததும், வாதவூரடிகள் ``இருமுச் சமயம்``2 என்றதும் இவற்றையே. ``அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும்``3 என அவர் அருளிச் செய்தது, காணாபத்தியம் கௌமாரம் முதலிய அறுவகைச் சமயங்களை. அவற்றிடையே கொள்கைப் பூசல் பெரும்பான்மையாக இல்லை.
இதனால், பிற சமயங்களெல்லாம் ஒருபுடை உண்மையை உடையனவாக, சைவம் முழுதுண்மை உடையதாதல் கூறப்பட்டது.