
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
பதிகங்கள்

ஆறு சமயம் முதலாம் சமயங்கள்
ஊற தெனவும் உணர்க உணர்பவர்
வேற தறஉணர் வார்மெய்க் குருநந்தி
ஆற தமைபவர்க் கண்ணிக்குந் தானே.
English Meaning:
Tamil Meaning:
சமயங்களுட் சிறந்தனவாகச் சொல்லப்படுகின்ற ஆறு சமயம் முதலாக அனைத்துச் சமயங்களிலும் ஒரோ ஒன்றே `நன்று` என உணர்பவர் உணரட்டும் (அஃது அவர் விருப்பம்) சமய வேற்றுமை பாராட்டாது, `அனைத்துச் சமயங்களையும் அதனதனளவில் நன்றே` என உணர்பவர்க்கு உண்மைக் குரு நந்தி பெருமானேயாவார். அவரது மரபு நெறியே சான்றோர்க்கு இனிதாய் இனிக்கும்.Special Remark:
அதனதன் அளவில் நன்றாதலாவது, ஓரோர் பக்குவம் உடையார்க்கு அவர்க்கேற்ற நன்மையைத் தருவதாதல் ``எச்சமயத் தோர்செல்லும் - தீதொழிய நன்மை செயல்``1 1நல்வழி. என ஔவையார் கூறியதும், எல்லாச் சமயங்களும் ஓரோர் நன்மை கருதியே எழுந்தனவாதல் பற்றியே. அங்ஙனமாயின் பிற மதங்களை நூல்கள் மறுத்தல் ஏன் எனின், மறுப்பு, அதில் உள்ள நன்மையைப் பற்றி எழுதல் இல்லை; அவ்வச்சமயத்திற்கு மேம்பட்ட சமயத்தில் உள்ள நன்மையை மறுப்பதைப் பற்றித்தான் எழும் என்க.உறுவது - நன்றாவது, ``உணர்வார் குரு`` என்னும் கிழமை்ப பொருள் தொகையில், `குரு` உயர்திணையாகலின் `உணர்வாரது குரு` என ஆறாவது விரியாது, `உணர்வார்க்குக் குரு` என நான்காவது விரிக்க. `அவரது ஆறு` எனச்சுட்டு வருவிக்க. `அது` இரண்டும் பகுதிப் பொருள் விகுதிகள். அமைபவர் - சான்றோர். சான்றோர் முழு துணர்ந்தவர். எனவே, `உணர்வார் உணர்க என்றது ஒருபுடை உணர்ந்தாரை நோக்கியாம்.
சமயங்களுட் சிறந்த சமயங்களாகச் சொல்லப்படும் ஆறாவன ஆறு தரிசன மதங்கள். அவை `வைசேடிகம், நையாயிகம், பூர்வ மீமாஞ்சை, உத்தர மீமாஞ்சை, சாங்கியம், யோகம்` என்பன. இவை வேதத்தின் தத்துவத்தை ஆராயும் நூல்களாகச் சொல்லப்படுதலின் சிறந்தனவாகச் சொல்லப்படுகின்றன. ``அறிவினால் மிக்க அறுவகைச் சமயத்து``1 எனச் சுந்தரர் அருளிச் செய்ததும், வாதவூரடிகள் ``இருமுச் சமயம்``2 என்றதும் இவற்றையே. ``அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும்``3 என அவர் அருளிச் செய்தது, காணாபத்தியம் கௌமாரம் முதலிய அறுவகைச் சமயங்களை. அவற்றிடையே கொள்கைப் பூசல் பெரும்பான்மையாக இல்லை.
இதனால், பிற சமயங்களெல்லாம் ஒருபுடை உண்மையை உடையனவாக, சைவம் முழுதுண்மை உடையதாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage