ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்

பதிகங்கள்

Photo

இங்குநின் றான் அங்கு நின்றனன் எங்குளன்
பொங்கிநின் றான் புவ னாபதி புண்ணியன்
கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறாய்
எங்கும்நின் றான்மழை போல்இறை தானே.

English Meaning:
He is Cosmic Awareness

He is Sentience, He is Gracious
Wisdom subtle is to know Our Lord;
He is embrace, He is union
In divine awareness,
He stood as Body Cosmic.
Tamil Meaning:
சிவன் இங்கிருக்கின்றான்; அங்கிருக்கின்றான்; எங்கும் இருக்கின்றான். எல்லாப் பொருள்கட்கும் மேலே யிருக்கின்றான்; உலகிற்குத் தலைவன்; அற வடிவினன்; இரவில் தண்கதிர் மதியாய் நிற்கின்றான்; பகலில வெங்கதிர் ஞாயிறாய் நிற்கின்றான்; மேகத்தைப்போலக் கைம்மாறு கருதாது எவ்வுயிர் கட்கும் தனது அருளைப் பொழிகின்றான்.
Special Remark:
`அத்தகையோனை மக்களுயிர்கள் தோத்திரிக்க வேண்டாவோ` என்பது குறிப்பெச்சம். ``இங்கு, அங்கு`` என்பன இவ்வுலகத்தையும், பிற உலகங்களையும் குறித்தன. `எங்கும் உளன்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. இது முடிந்தது முடித்தல். பொங்குதல் - மேல் எழுதல். உலகங்களை, ``புவனா`` எனப் பெண்பாலாகக் கூறினார். `கங்குலில் கதிர் மதியாய் நின்றான்` என மாற்றி ஆக்கம் வருவித்துரைக்க. இதனானே ``ஞாயிறாய்`` என்பதில், `பகலில் நின்றான்` என்க. ``இறைதான்`` என்பதில் `தான்` எழுவாய்ப் பொருள்படவந்த அசை நிலை.
இதனால், மக்கட்குச் சிவனைத் தோத்திரித்தல் கடமையாதல் கூறப்பட்டது.