ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்

பதிகங்கள்

Photo

முதல்ஒன்றாம் ஆனை முதுகுடன் வாலும்
திதமுறு கொம்பு செவி துதிக் கை கால்
மதியுடன் அந்தர் வகைவகை பார்த்தே
அதுகூற லொக்குமவ் வாறு சமயமே.

English Meaning:
Tamil Meaning:
``ஒன்றே பொருள் என்னின், வேறென்ப; வேறென்னின் - அன்றென்ப ஆறு சமயத்தார்.1 என்றாற்போலச் சமய வாதிகள் ஒருவர் கொள்கையை மற்றவர் மறுத்து வாதம் புரிதலை யானை கண்ட குருடர் கதையில் வைத்து உணர்த்திற்று இம்மந்திரம்.
Special Remark:
``சமய வாதிகள் தத்தம் மதங்களே
அமைவ தாக அரற்றி மலைந்தனர்``2
என ஆளுடைய அடிகளும் அருளிச்செய்தார். ``ஒன்றதே பேரூர்; வழி ஆறதற்குள``3 3மந்திரம் - 15,38. என்னும் மந்திரத்திற்கு இங்கும் கூறி முடிக்கின்றார்.
இதன் பொருள் வெளிப்படை. ஆனையாகிய முதல் ஒன்றேயாம்; ஆயினும் அந்தகர் அதன் உறுப்புக்களை வேறு வேறு முதல்களாகக் கூறிக் கலாம் விளைத்தல் போலவே, மெய்ப்பொருள் ஒன்றேயாயினும் அதன் இயல்புகளை வேறு வேறு பொருள்களாகக் கருதிச் சமய வாதிகள் ஒருவரை ஒருவர் மறுக்கின்றனர்` என்பது இம்மந்திரத்தின் திரண்ட கருத்து. சிவஞான போத அவையடக்கத்தில்,
``தம்மை - உணரார்; உணரார் உடங்கியைந்து தம்மில்
புணராமை``
என்றதன் உரையிலும் மாதவச் சிவஞான யோகிகள் இக்கதையையே உவமையாகக் காட்டினார்.
அகரம், பண்டறி சுட்டு அன்றி, `ஆறு ஆறாகச் சொல்லப் படுகின்ற சமயம்` எனினுமாம். `ஒருபுடையுணர்வே முரண்பாட்டிற்குக் காரணம் ஆதலின், முழுதுணர்வார்க்கு முரண் ஏதுமில்லை` என்பதாம்.