ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்

பதிகங்கள்

Photo

திகைஅனைத் தும்சிவ னே அவன் ஆகின்
மிகைஅனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே
புகைஅனைத் தும்புறம் அங்கியிற் கூடும்
முகைஅனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே.

English Meaning:
The Pervasive Siva is Here as Well

The infinite spaces of the Seven worlds
He filled in oneness, expanding limitless;
Yet is He not easy of reach;
Siva Himself into myriad Jivas pervaded
In this world as well, He our Lord.
Tamil Meaning:
மனம் உடைமையால், `மனிதர்` எனப் பெயர் பெற்றவர்களே! (அந்த மனம் திருந்தியதாய் இல்லையே.) (``மனிதர்காள்! இங்கே வம்மொன்று சொல்லுகேன்``1 என்பதிலும் இக்குறிப்பு உள்ளது.) உலகனைத்தும் சிவமயேமே. அனைத்தும் அவனானபின்பு சொல்ல வேண்டியது என்ன இருக்கின்றது? ஆகவே, வீண் வாதங்களைக் கிளப்ப வேண்டா. ஏனெனில், சில இடங்களில் வெளியே காணப்படுகின்ற புகை உள்ளே மறைந்திருக்கின்ற நெருப்பினின்றும் வந்ததுதான். பின்பு அஃது அடங்குவதும் நெருப்பில்தான் அது போலத் -தான் காணப்படுகின்ற பொருள்கள் அனைத்தும் சிவனிடத்திலிருந்து வந்தவைதாம். ஆகவே, அவை ஒடுங்குவதும் அவனிடத்தில்தான்.
Special Remark:
இவ்வாறு கூறுவன ஆணை மொழிகளாம். அஃதாவது உபதேச மொழிகளாம். ஆசிரியர் மாணாக்கனை `இவ்வாறு நில்` என்றால் மாணாக்கன் அவ்வாறு நிற்க வேண்டியவனே தவிர, `ஏன், ஐயா, இவ்வாறு நிற்கச் சொல்கின்றீர்` என வினாவுதற்கு உரியன் அல்லன். அத்தகையவான மொழிகள் ஆணை மொழிகளாம். ``நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த``2 எனத் தொல்காப்பியர் கூறியதும் இவ்வாறான மொழிகளை நோக்கியே. இவ்வாறான நல்லாசிரியரை, தொல்லாணை நல்லாசிரியர்``3 எனச் சங்க இலக்கியங்கள் கூறும். ஞானசம்பந்தரது பாடல்களில் பல இத்தகையினவாய் இருத்தல் காணலாம். ``புறம்`` என்பதற்கு, `புறத்து உள்ளன`` எனவும் `பின் அங்கியிற் கூடும்` எனவும் உரைக்க. இஃது எடுத்துக் காட்டுவமை. முகை - அரும்பு. அரும்புதல் தோன்றுதல் ஆகலின் அது தோன்றிய பொருள்களைக் குறித்தது. ஆதிப் பிரான் - ஆதி சத்தியை உடைய கடவுள். ``எல்லாம் சிவன் என்ன நின்றாய் போர்றி``4 என்ற அப்பர் திருமொழியை, ``திகை அனைத்தும் சிவம்`` என்பதனோடு ஒப்பிட்டுக் காண்க.
இதனால், சிவன் எல்லாப் பொருளுமாய் நிற்கும் பெருமை புகழ்ந்து கூறப்பட்டது.