ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்

பதிகங்கள்

Photo

அமைந்தொழிந் தேன் அள வில்புகழ் ஞானம்
சமைந்தொழிந் தேன் தடு மாற்றம்ஒன் றில்லை
புகைந்தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி
வகைந்து கொடுக்கின்ற வள்ளலு மாமே.

English Meaning:
The Bounteous One

Thus remaining,
Limitless Jnana I attained;
No more wavering there is;
And as I reach the Holy One,
In the Land where Kundalini Fire burns,
The Bounteous One,
His choicest blessings gives.
Tamil Meaning:
இம் மண்ணுலகம் தீக்குணங்கள் பலவும் மூண்டு எரியும் இடம். புண்ணியமே வடிவான சிவன் இதன்கண் தன் திருவடி தோயும்படி எழுந்தருளி வந்து மெய்ந்நெறிப் பொருளை வகை வகையாக வகுத்துத் தெளிவிக்கின்ற குருமூர்த்தியும் ஆவான். அத்தகைய குருவருளால் நான் அளவற்ற புகழையுடைய ஞானத்தைப் பெற்றுவிட்டேன். அதன் கண் எனக்குத் தடுமாற்றம் யாதும் இல்லை. எனவே, யான் அலைவு ஒன்றும் இன்றி, முழு அமைதியை உடையவனாயினேன்.
Special Remark:
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, ``அமைந் தொழிந்தேன்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க. ``வள்ளலும் ஆம்`` என்றது சிவன் பலர்க்கு அருள்வதைப் பொதுவாக எடுத்துக் கூறியது. உம்மை, சிறப்பு. வகைந்து - வகை செய்து. தாம் குருவருள் பெற்றவாற்றை மேல் பல இடங்களில் கூறினார் ஆகலான் இங்கு அதனைக் கூறாது பயனை மட்டுமே கூறினார். இம்மந்திரம் ஈரடி எதுகை பெற்றது.
இதனால், சிவன் குருவாகியும் வந்து அருளும் கருணைத் திறம் புகழ்ந்து கூறப்பட்டது.