ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்

பதிகங்கள்

Photo

உலகம தொத்துமண் ஒத்(து) உயர் காற்றை
அலகதிர் அங்கிஒத்(து) ஆதிப் பிரானும்
நில(வு) இயல் மாமுகில் நீர்ஓத்தும் ஈண்டல்
செலவொத்(து) அமர்திகைத் தேவர் பிரானே.

English Meaning:
He Confers Blessings According to Degree of Jnana Attained

In Fire and Sun He pervades,
In Wind He pervades,
In Moon He pervades,
Pervading all,
He gifts the Land True
To their Jnana according.
Tamil Meaning:
எல்லாப் பொருள்கட்கும் முதலாயுள்ள சிவன் நிலம், நீர், தீ, காற்று, வானம், ஞாயிறு, திங்கள் என்னும் பொருள்களாக அவற்றுடன் ஒன்றாய்க் கலந்திருத்தலால், எல்லா உயிர்களும் அவனேயாய், அவை செல்லும் நெறிகளிலும் அவற்றோடு உடனாய் உதவி புரிந்து எண்திசைக் காவலர்கட்கும் தலைவனாய், உலக முதல்வன் ஆயினான்.
Special Remark:
செய்யுள் நோக்கி நிலம் முதலியன முறையின்றி, ஏற்ற பெற்றியில் வைக்கப்பட்டன. கதிர் முதலிய பிறவற்றிலும் இரண்டன் உருபு விரிக்க. நிலவு - சந்திரன். முகில், இங்கு ஆகுபெயராய், வானத்தை உணர்த்திற்று. ``உலகம்`` என்றது உயிர்த் தொகுதியை. அது, பகுதிப்பொருள் விகுதி. ஒத்தல், அவற்றோடு ஒன்றாய் இயைந்து நிற்றல். `அமர் தேவர்` என இயையும். `ஆதிப் பிரான் ஒத்து, ஒத்துப் பிரான் ஆயினான்` என வினை முடிக்க. `உலகு` நிலம் முதலிய எட்டுக் கூறுகளாய் அடங்குதலாலும், அவ் எட்டுக் கூறுகளிலும் நிறைந்து அவற்றை இயக்குதலாலும் சிவன் உலக முதல்வனாயினான்` என அவனது பெருமையை விளக்கியவாறு. ``ஆதிப்பிரானும்`` என்னும் உம்மை. அசைநிலை. இறுதியில் `ஆயினான்` என்னும் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. எண் திசைக் காவலர்களுக்குப் பிரான் ஆயினமை கூறும் முகத்தால் உலக முதல்வன் ஆயினமை குறித்தவாறு.
இதனால், சீவன் அட்ட மூர்த்தியாம் சிறப்பினால் உலக முதல்வன் ஆயினமை புகழ்ந்து கூறப்பட்டது.