ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்

பதிகங்கள்

Photo

விதியது மேலை யமரர் உறையும்
பதியது பாய்புனற் கங்கையும் உண்டு
துதியது தொல்வினைப் பற்றறு விக்கும்
மதியது வவ்விட்ட(து) அந்தமும் ஆமே.

English Meaning:
Goal Ultima

That indeed is State Exalted,
That indeed is where Celestials have abode,
That indeed is where Ganga too-flows,
Sacred it is;
It is the State that severs,
Roots of Karmic desires,
That of yore come;
It is the Goal Ultima
Devoutly to be sought for.
Tamil Meaning:
ஓர் அறிவு எனது அறிவைத் தன்னுள் விட்டது. அஃது எல்லாப் பொருள்கட்கும் அதுவது இயங்குதற்குரிய நெறி முறைகளை வகுப்பது. சுவர்க்க லோகத்தில் வாழும் அமரர்கட்கு மேலான அமரர்கள் வாழ்கின்ற அந்த உலகத்தில் அஃது உள்ளது. அதன் சடை முடியில் வேகமாகப் பரந்து பாய்கின்ற வெள்ள நீர் அடங்கிக் கிடக்கின்றது. யார் யார் எந்த எந்த பெயரைச் சொல்லிப் புகழ்ந்தாலும் அந்தப் புகழ்ச்சிகளையெல்லாம் உண்மையில் தன்னுடையனவாகவே உடையது. அது பழவினையாகிய கட்டினை ஆசானைக் கொண்டு அறுப்பிக்கும். கடைசியாக எல்லாப் பொருட்கும் அதுவே புகலிடமாய் உள்ளது.
Special Remark:
``மதியது வவ்விட்டது`` என்பதை முதலிற் கொள்க. ``மதியது`` என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. `வவ்வியது` என்பது, ``வவ்வியிட்டது`` என, `இடு` என்னும் அசைச்சொல்லோடு வந்து, இகரம் தொகுக்கப்பெற்றது. ``வவ்வியிட்டது`` என்னும் வினைப் பெயரே மேல் வந்த பயனிலைகளுக்கெல்லாம் எழுவா யாயிற்று. `மதியை வவ்வியது` என்றதனால் அதுவும் மதியாதல் பெறப் பட்டது. ``விதியது`` என்றது, `விதியை வகுக்கும் ஆற்றலுடையது` என்றவாறு. மேலை அமரர் சுத்த மாயா புவனங்களில் வாழ்வோர். பாய்புனற் கங்கையை உடைமை கூறியது. இங்குச் சொல்லப்பட்ட பெருமைகளையெல்லாம் உடைய அந்தப் பெரும்பொருள் இவ்வுலகத்தில் வெளிப்படும்பொழுது இவ்வுருவுடையதாய்த்தான் வெளிப்படும்` என்பது உணர்த்தற்கு.
``அண்டம் ஆரிரு ளூடுகடந் தும்பர்
உண்டு போலும்ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறிவார்? அறி வாரெலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே``1
என்னும் அப்பர் திருமொழியைக் காண்க. உம்மை, `பதயதேயன்றி` என இறந்தது தழுவிநின்றது. ``யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே - மாதொரு பாகனார்தாம் வருவர்`` என்னும் முறைமையால் துதிப்பார் துதிக்கும் துதிகள் யாவும் சிவனுடைய துதிகளேயாதல் அறிக.
``எல்லாப் பெயரும் பரமசிவன் பெயர்
என்பதே வேதநூல் துணிபு``
என்பது சிவஞான மாபாடியம்.2