ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்

பதிகங்கள்

Photo

பராபர னாகிப்பல் லூழிகள் தோறும்
பராபர னாய்இவ் வகலிடம் தாங்கித்
தராபர னாய்நின்ற தன்மை யுணரார்
நிராபர னாகி நிறைந்துநின் றானே.

English Meaning:
He Pervades as Prana Breath

He is the Mighty God to adore,
None beside Him are;
He is the Sense, the Feel, the Sound, and Sound`s End;
He is the Body, too, of Jiva,
As Prana breath,
He the Lord is immanent in all.
Tamil Meaning:
சிவன், மேலான பொருள்கட்கெல்லாம் மேலான பெரும்பொருளாய் நிற்பினும் ஊழிகள் தோறும் அவற்றின் தொடக்க மாயும், முடிவாயும் நிற்கின்ற அளவினனும் ஆய், நாம் கண்டும், கேட்டும் உணர்கின்ற அனைத்துலகங்களையும் நிலம் போலத்தாங்கி நிற்கும் தன்மையுடையனாதலை உலகர் உணர்தல் இல்லை. ஆயினும், அவன் அதனால் கீழ்மை ஒன்றும் இலனாய், எல்லாப் பொருள்களிலும் நிறைந்து அவற்றை இயக்கியே நிற்கின்றான்.
Special Remark:
`சிவன்` என்னும் எழுவாய் அதிகாரத்தால் வந்தது. ``பராபரன்`` இரண்டில் முன்னது, `பராற்பரன்` என்பதன் மரூஉ. பின்னது, `பரனாயும் அபரனாயும் நிற்பவன்` என்றதாம். பரம் - மேல், அபரம் - கீழ். `பராபரன்` என்பதை, ``மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க``1 என்னும் திருவாசகத்திலும் காண்க. இந்த, `பரம், அபரம்` என்பன இங்கும், ``அந்தம் கடந்தும்`` 2 என்னும் மந்திரத்திற் போலவே, `முன், எனப் பொருள் தந்தன. `தராபரன்` என்னும் வட சொல் தொகை மொழி உவமத் தொகை. பரன் - தன்மையுடையவன். ``உணரார்`` என்பதன்பின், `ஆயினும்` என்பது வருவிக்க. `அபரன்` என்பது முதல் நீண்டு, `நிர்` என்பதனோடு புணர்ந்து` ``நிராபரன்`` என வந்து, `கீழ்மை யில்லாதவன்` எனப் பொருள் தந்தது.
``தரையை யுணராது தாமே திரிவார்;
புரையை உணரா புவி``3
என்றாற்போல், நிலம் யார் தன்னைப் போற்றினும், போற்றா தொழியினும் தாங்குதலாகிய தன் கடமையை அஃது ஆற்றி வருகின்றது. அதுபோலத்தான் சிவன் தன் செயலைச் செய்து நிற்கின்றான் - என்பதையே ``தராபரனாய் நின்ற தன்மை என்றார். இதனையே அப்பர் பெருமான், ``தன்கடன் அடியேனையும் தாங்குதல்`` அஃது யார் போற்றிடினும் நிகழ்ந்து கொண்டே யிருக்கின்றது. ஆயினும், ``என்கடன் பணி செய்து கிடப்பதே``4 என்பதை நான் உணர்ந்தேனா என்னும் ஐயம் எழுகின்றது என்று அருளிச் செய்தார். சிவன் இவ்வகலிடத்தைத் தாங்குதலை நாயனார் சில இடங்களில் நினைவு கூர்கின்றார். அப்பரும் சிவனை, ``பொய்யாத பொழில் ஏழும் தாங்கி நின்ற - கற்றூண்காண்``5 எனக் குறித்தருளினார் உலகனைத்தையும் தாங்கும் சிவனது சத்தி, `ஆதார சத்தி` எனச் சிவாகமங்களில் சொல்லப்படுகின்றது. ``நின்றான்`` என்பது, நின்று செய்தலாகிய தன் காரியம் தோன்ற நின்றது.
இதனாலும், சிவனது சில திருவருட் சிறப்புக்களே புகழ்ந்து கூறப்பட்டன.